அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைதிகளாக சிறைவைப்பு- தொடர்பு கொள்ள முடியாமல் குடும்பத்தினர் பரிதவிப்பு!
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைதிகளை போல அடைத்து வைத்து கொடுமைப்படுத்தப்படுகின்றனர். அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் குடும்பத்தினர் பரிதவிக்கின்றனர்.
சென்னை: மன்னார்குடி கோஷ்டியால் கைதிகளைப் போல சிறைவைக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள முடியாமல் அவர்களது குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர். எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்பட்ட இடத்தில் செல்போன்களை செயலிழக்க செய்யும் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதால் எஸ்.எம்.எஸ்.கள் கூட போகவில்லை என்கின்றனர் அவர்களது குடும்பத்தினர்.
முதல்வர் பதவியை கபளீகரம் செய்துவிட வேண்டும் என்பதற்காக மன்னார்குடியில் இருந்து இறக்கிவிடப்பட்ட அடியாட்கள் கும்பல் கட்டுப்பாட்டில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். 2-வது நாளாக ஹோட்டல்களில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏக்களின் செல்போன்களை ஏற்கனவே பறித்து வைத்திருக்கிறது மன்னார்குடி கும்பல். 2 நாட்களாக எம்.எல்.ஏக்கள் தங்களது குடும்பத்தினரிடம் பேச முடியாத நிலையில் உள்ளனர்.
எம்.எல்.ஏக்களின் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினாலும் கூட அதுவும் போகவில்லை. எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்பட்ட ஹோட்டல்களில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினர் என்ன செய்வது என தெரியாமல் பரிதவித்து வருகின்றனர்.
இப்படி கைதிகளைப் போல நடத்துவதால் சசிகலா மற்றும் மன்னார்குடி ரவுடி கும்பல் மீது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குடும்பத்தினரும் கடும் கோபத்தில் உள்ளனர்.