கர்நாடகத்தின் புதிய அணை: தடுக்க கோரி ஜெ, கருணாநிதியுடன் விவசாயிகள் சங்க தலைவர் சந்திப்பு
சென்னை: மேக தாதுவில் புதிய அணை கட்ட பூமி பூஜை போடப்பட்டுள்ளதை எதிர்த்து போராட்டம் நடத்த ஆதரவு அளிக்க வலியுறுத்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதியை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி. ஆர். பாண்டியன் சந்தித்து பேசினார்.
மேக தாதுவில் புதிய அணை கட்ட பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வலியுறுத்தி, அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் அரசியல் தலைவர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையிலான குழுவினர் சென்னை சிஐடி காலனியில் உள்ள இல்லத்தில் நேற்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார்.

இன்ற காலையில் போயஸ்கார்டனில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பி. ஆர். பாண்டியன் தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கர்நாடக அரசு மேகதூது ஆணை கட்டுவதற்கு மத்திய அரசு துணை போகிறது. இதனை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவளிக்க அனைத்து கட்சி தலைவர்களின் ஆதரவினை நாங்கள் கோரி வருகிறோம். இது குறித்து நல்ல முடிவை விரைவில் கூறுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார் என்று பி. ஆர். பாண்டியன் கூறினார்.
தமிழகத்திற்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட தர கூடாது என்று கர்நாடக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. ஏற்கனவே, அனுமதியின்றி 7 அணைகளை கர்நாடக அரசு கட்டியது. இப்போது, புதிதாக ராசி மணல், மேக தாது என்னும் இடங்களில் அணை கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டுள்ளது.
நேற்று திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பாமக முதல்வர் வேட்பாளரும், அக்கட்சியின் இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் ஆகியோரை சந்தித்தோம். இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அவர்களின் ஆதரவை கோரும் மனுவினை நாங்கள் அளித்தோம் என்று பி.ஆர். பாண்டியன் கூறினார்.












Click it and Unblock the Notifications