மாடுகளை மத்திய அரசிடம் ஒப்படைத்து.. ஈரோடு விவசாயிகள் நூதன போராட்டம்!
மாடுகளை மத்திய அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை ஈரோட்டில் உள்ள விவசாயிகள் நடத்தினர்.
சென்னை: ஈரோடு சென்னிமலையில் உள்ள விவசாயிகள் தங்கள் மாடுகளை மத்திய அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எருதுகள், பசு, காளை, கன்றுக் குட்டி, ஒட்டகம் ஆகியவற்றின் இறைச்சியை சாப்பிடக் கூடாது என்றும் இறைச்சிக்காக அவற்றை விற்கக் கூடாது என்றும் மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை தடை விதித்தது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.
மாட்டிறைச்சிக்கான தடையை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல் திமுக தலைமையில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டமும் நடந்து வருகிறது.
இந்நிலையில் பால் கறக்காத மாடுகளை வைத்துக் கொண்டு தங்களால் தீனி போட முடியாது என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மாடுகளை விற்றால்தான் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க முடியும்.
இதை திரும்ப பெறுமாறு கோரி வரும் நிலையில் மத்திய அரசும், தமிழக அரசும் மௌனம் காத்து வருவதால் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் மாடுகளை மத்திய அரசிடம் ஒப்படைக்கு்ம போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். தங்கள் மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.