தொடர் மழை.. அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு:.. விவசாயிகள் மகிழ்ச்சி
நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை வலுப்பெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் நெல்ல மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் உள்ள தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், கடையநல்லூர், மேக்கரை, வடகரை, குண்டாறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் கண்ணுப்புளி மெட்டு குண்டாறு நீர்தேக்கத்திற்கும், மேக்கரை அடவிநயினார் கோவில் நீர்தேக்கத்திற்கும், கடையநல்லூர் கருப்பாநதி நீர்தேக்கத்திற்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குண்டாறு அணையில் 28 அடி நீரும், மேக்கரை அடவிநயினார் கோவில் நீர்தேக்க பகுதியில் பெய்த பலத்த மழையினால் 52 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் புதன்கிழமை பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 60அடியாக உயர்ந்தது.

கருப்பாநதி அணையின் நீர்மட்டம் அதிகரித்து 40அடியாக உயர்ந்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதையடுத்து, விவசாயப் பணிகளை தொடங்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நீர்தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications