ஈரோடு கீழ்பவானியில் கான்கிரீட் வாய்க்காலுக்கு எதிர்ப்பு.. 6-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
ஈரோடு: கீழ்பவானியில் வாய்க்கால் மறு சீரமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்துறை வாய்க்கால் மேடு பகுதியில் விவசாயிகள் 6-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கீழ் பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளை ரூ.710 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள கடந்த அதிமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டு இருந்தது. இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் ஒரு பிரிவினர் போராடி வருகின்றனர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எனக்கூறி இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று மற்றொரு பிரிவு விவசாயிகளும் போராடி வருகின்றனர்.

அமைச்சர் துரைமுருகன், முத்துசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் தீர்வு ஏற்படவில்லை. இதற்கிடையே, சென்னை ஹைகோர்ட் உத்தரவின் அடிப்படையில் அதிகாரிகள் தற்போது சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள். கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால் மேடு பகுதி விவசாயிகள் கடந்த 7 ஆம் தேதியில் இருந்து தொடர் காலவரையற்ற உண்ணாவிரத போரட்டத்தை தொடங்கியுள்ளனர்.
6-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வாயில் கருப்புத்துணி கட்டியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,இன்று போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அதிக அளவில் வந்தனர். விவசாயிகள் போராட்டத்திற்கு பாஜக, கொமதேக, நாம் தமிழர், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சில அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவும் தெரிவிக்கும் விதமாக பெருந்துரை தினசரி மார்க்கெட்டில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதேபோல், சென்னிமலை, காஞ்சிகோயில், திங்களூர், நசியனூர், வெள்ளோடு, ஈங்கூர், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் நடத்தி வரும் போராட்டக்குழுவினர் கூறியதாவது:-

கீழ் பவானி பாசன கால்வாய் என்பது குடிநீர், விவசாயம், மரங்கள், சுற்றுச்சூழல் காக்கும் வகையிலான மண் கால்வாய் ஆகும். இந்த கால்வாய் சார்ந்த 180 க்கு மேற்பட்ட ஊராட்சி பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. கான்கீரிட் போடுவதன் மூலம் நீர் மேலாண்மையை கெடுக்க முயற்சி நடக்கிறது. இந்த மண்கால்வாயை, மண்ணைக்கொண்டே சீரமைக்க வேண்டும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் விவசாயிகளுக்கு அளித்த உத்தரவாதத்தைமீறி சில இடங்களில் கிளை வாய்க்கால்களும், மண் கரைகளும் கான்கிரீட்டால் போடப்படுகிறது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து 6-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications