காவிரியில் கூடுதல் நீர் கோரி மணலில் புதைந்து நூதனப் போராட்டம்!! #TNNeedsKaveri
திருச்சி: தமிழத்திற்கு காவிரி தண்ணீரை தர வேண்டும் என்று கோரியும் கர்நாடக மற்றும் மத்திய அரசைக் கண்டித்தும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் திருச்சி மாம்பாழச் சாலையில் காவிரி ஆற்றில் நடுவே மணல் குழியில் தங்களை புதைத்துக் கொண்டு நுதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படாததால் தமிழகத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் கடும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
கர்நாடக மாநிலத்தில் போராட்டம் நடந்து வரும் அதே நேரத்தில் வற்றிப் போய் கிடக்கும் காவிரி ஆற்றின் நடுவே மணலில் குழி தோண்டி தங்களை புதைத்துக் கொண்டு நுதன முறையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது, தமிழகத்திற்கு தண்ணீர் விடக் கூடாது என்று கர்நாடக அரசே அம்மாநிலத்தில் பந்த் நடத்துகிறது. ஆனால் நம்முடைய தமிழக அரசு போதிய அளவு நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது கர்நாடக அரசு திறந்து விடும் நீர் கடைமடைக்கு கூட வருமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடைய போலீசார், மணலில் புதைத்துக் கொண்டு போராட்டம் நடத்தும் விவசாயிகளை மணலில் இருந்து அப்புறப்படுத்தி கைது செய்துள்ளனர்.