பயிர்காப்பீடு வழங்குவதில் குளறுபடி: திண்டுக்கல் விவசாயிகள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
பயிர்காப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்: பயிர்க்காப்பீடு தொடர்பாக தங்களுக்கு உரிய பதிலை வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். அத்துடன் வாயில் கருப்பு துணி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2016-ம் ஆண்டுமுதல் தமிழகம் வறட்சி சூழ்நிலையை சந்தித்து வருவதால், விவசாயிகளின் நலனுக்காக பயிர் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது.

இதில் பழனியை அடுத்த தொப்பம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர். இவர்களுக்கு நிவாரண தொகை 1 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரை காசோலை வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். அப்போது தங்களது பயிர்க்காப்பீட்டு தொகை குறைந்த அளவே வந்துள்ளதையும் 7,377 பேருக்கு இன்னும் காப்பீட்டு தொகையே வரவில்லை என்றும் முறையிட்டனர்.
இதற்கு ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், இந்த விவகாரத்தில் எங்களது பணியை முடித்துவிட்டோம், இதற்கு மேல் இன்சூரன்ஸ் கம்பெனிதான் பயிர்காப்பீட்டு தொகை பற்றி முடிவு செய்ய வேண்டும் என்று பதிலளித்தனர்.
தங்களுக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால், விவாசயிகள் ஆத்திரமடைந்தனர். இதனால் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அலுவலக வளாகத்தில் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு,உடனடியாக காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.












Click it and Unblock the Notifications