பொது பிரச்சனைகளில் தலையிடமாட்டோம் என்பதா? நடிகர் விஷாலுக்கு எதிராக கொந்தளித்த விவசாயிகள்
வேதாரண்யம்: காவிரி நீர் பிரச்சனை உள்ளிட்ட பொதுப் பிரச்சனைகளில் தலையிடமாட்டோம் என்று அறிவித்த நடிகர் சங்க பொதுச் செயலாளார் விஷாலுக்கு கண்டனம் தெரிவித்து வேதாரண்யத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுத்தேர்தல் போல் நடத்தப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் அண்மையில் செயற்குழு கூட்டத்தை நடத்தினர். கூட்டத்திற்கு பின்னர் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவிரி நீர் பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, காவிரி நீர் போன்ற பொதுப்பிரச்சனைகளில் நடிகர் சங்கம் தலையிடாது என பதிலளித்தார்.

விஷாலின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வேதாரண்யம் தாலுக்கா, ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் வேதாரண்யம் வட்டார விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் காவிரி நீர் பிரச்சனை போன்ற பொதுப்பிரச்சனைகள் குறித்து நடிகர் சங்கம் போராட்டம் நடத்தாது என நடிகர் விஷால் அறிவித்துள்ளதை திரும்ப பெறவேண்டும். அப்படி இல்லையென்றால் ஒருங்கிணைந்த காவிரி டெல்டா பகுதியில் நடிகர் விஷால் படத்தை திரையிட விடமாட்டோம்.
விஷாலின் தம் பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளை ஒன்றுதிரட்டி அவருக்கு எதிராக பல்வேறு போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் கூறினர். விஷாலை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.












Click it and Unblock the Notifications