எழும்பூர் ரயில் நிலையத்தில் விவசாயிகள் திடீர் மறியல்... குண்டுகட்டாக தூக்கிச் சென்ற போலீஸ்!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ராமேஸ்வரம் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர்.
சென்னை : சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ராமேஸ்வரம் ரயிலை மறித்து தண்டவாளத்தில் படுத்து விவசாயிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.
காவிரி டெல்டா விவசாயிகளின் ஜீவாதார பிரச்னையான காவிரி நீர் எந்த தடையுமின்றி கிடைக்க வழி செய்யும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசியல் கட்சியினருடன், விவசாய சங்கத்தினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஒரு பிரிவினரை போலீசார் சாலையிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனிடையே தனித்தனியாக ரயில் நிலையத்திற்குள் சென்ற விவசாயிகள் திடீரென ராமேஸ்வரம் செல்லும் ரயிலை மறித்து தண்டவாளத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர். விவசாயிகள் திடீரென மறியலில் ஈடுபட்டதை எதிர்பாராத போலீசார் அவசர அவசரமாக போராட்டம் நடத்தியவர்களை நோக்கிச் சென்று அவர்களை தண்டவாளத்தில் இருந்து குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதிலும் சிலர் தப்பித்து பக்கத்தில் இருந்த தண்டவாளத்தை ரயிலை முற்றுகையிட முயன்றனர். விவசாயிகளின் ரயில் மறியலால் ராமேஸ்வரம் ரயில் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications