தொடரும் காவிரி உரிமை போராட்டங்கள்… காய்ந்து போன வாழை மரங்களோடு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருச்சி: காவிரியில் வரும் தண்ணீரை முறையாக திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தி காய்ந்து கருகி போன வாழை மரங்கள், செடி கொடிகளை டிராக்டரில் ஏற்றிக் கொண்டு அரசு அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி நதி நீர் பங்கீட்டில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துள்ளதை கண்டித்தும், காவிரியில் இருந்து நீரை முறையாக திறந்து விடக் கோரியும், திருச்சியில் உள்ள பொதுப்பணி செயற்பொறியாளர் அலுவலகம், ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட அலுவலகத்திற்கு த.மா.க விவசாயி பிரிவு புலியூர் நாகராஜ் தலைமையில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது, காவிரி நதி நீர் பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், அனைத்து விவசாய சங்களையும் அழைத்து அவசர கூட்டம் நடத்த வேண்டும். மேலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து புலியூர் நாகராஜ் கூறியதாவது:
திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள கட்டளை மேட்டுவாய்க்கால் உய்யக்கொண்டான் உள்ளிட்ட 17 கிளைவாய்க்கால்களிலும் கடைமடை வரை தண்ணீர் பாசனத்திற்கு இது வரை கிடைக்கவில்லை. உடனடியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவேரியில் இருந்து கிளை வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து சில நாட்கள் ஆகியும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் போய் சேரவில்லை. இதனால் ஆழ்கிணறுகள், திறந்தவெளி கிணறுகளில் நீர் ஆதாரம் முற்றிலும் குறைந்து விட்டது. மேற்பகுதியில் தண்ணீர் தேக்கி குடிநீர் வழங்க வேண்டும் என்று நாகராஜ் கூறினார்.