அதிமுகவுக்காக அலைபாயும் தமிழக காங். காவிரிக்காக டெல்லிக்கும் கர்நாடகாவுக்கும் போகலையே?
சென்னை: பாஜகவிடம் இருந்து அதிமுகவை காப்பாற்ற துடியாய் துடிக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி காவிரி பிரச்சனையில் இவ்வளவு அக்கறை காட்டாதது ஏன்? என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவே முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவித்தது. இது தமிழகத்தில் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தமிழக விவசாயிகளின் முதுகில் குத்திய மத்திய அரசுக்கும் அதை கண்டிக்காத தமிழக பாஜகவுக்கும் எதிராக குரல்கள் வெடித்தன. கர்நாடகா பாஜகவினரைப் போல தமிழக பாஜகவினரும் டெல்லிக்குப் போய் மத்திய அரசை வளைக்காதது ஏன் என்ற கேள்விகள் எழுந்தன.

தமிழக பாஜக
இதனைத் தொடர்ந்து டெல்லிக்கு படையெடுத்த தமிழக பாஜக தலைவர்கள் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவை சந்தித்தனர். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் வலியுறுத்தினர்.

துரும்பையும் கிள்ளி போடலை
ஆனால் மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸோ இந்த விவகாரத்தில் துரும்பைக் கூட கிள்ளிப் போட முயற்சிக்கவில்லை. இத்தனைக்கும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிதான் நடைபெறுகிறது. தமிழக பாஜகவினரைப் போல டெல்லிக்குப் போய் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து காவிரி விவகாரத்தில் நியாயப்படி கர்நாடகா அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்தவில்லை.

பிஸி திருநாவுக்கரசர்
அதேநேரத்தில் அதிமுகவை காப்பாற்றுவதற்காக டெல்லியில் இருந்து ராகுல் காந்தியை வரவழைப்பதிலும் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆளுநரை சந்திப்பதிலும் படுபிஸியாக இருக்கிறது.. இந்த விவகாரத்துக்காக ஆளுநரையெல்லாம் போய் பார்த்து வருகிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.

குரல்வளையை நெரிக்கும் காங்.
ஏன் காவிரி பிரச்சனையில் கர்நாடகாவை நியாயமாக நடந்து கொள்ள அறிவுறுத்துங்கள் என சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் நேரில் சந்தித்து வலியுறுத்தவில்லை... காவிரி மேலாண்மை வாரியத்தில் மத்திய பாஜக அரசு தமிழர்கள் முதுகில் குத்தியது எனில் ஒட்டுமொத்த காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் குரல்வளையை நெரிப்பது கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்தானே....

எப்படி மன்னிப்பது?
மத்திய பாஜக அரசின் வஞ்சகத்தைவிட கர்நாடகா காங்கிரஸ் அரசின் அட்டூழியம் மிக மோசமானது. தமிழரின் உடைமைகள் சூறையாடப்பட்டு தமிழர்கள் தாக்கப்பட்ட போதும் கூட கர்நாடகாவுக்கு போய் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து தடுத்து நிறுத்துங்கள் என வலியுறுத்தவில்லை தமிழக காங்கிரஸ் தலைவர்கள்... காவிரி பிரச்சனைக்காக கர்நாடகா அரசியல் தலைவர்கள் டெல்லிக்கு படையெடுக்கும் போது தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் மரியாதை நிமித்தமான சந்திப்புகளோடு மவுனியாகிவிடுகிறார்.. இதை எப்படி மன்னிப்பது... என்பது தமிழக விவசாயிகளின் குமுறல்.












Click it and Unblock the Notifications