மகள் சடலத்தில் காயம்… ஆம்புலன்ஸ்சுடன் போலீசில் புகார் செய்த தந்தை… ஈரோட்டில் பரபரப்பு
ஈரோடு: மகளின் சடலத்தில் காயம் இருப்பதால் சந்தேகமடைந்த தந்தை ஆம்புலன்ஸ்சுடன் காவல் நிலையம் சென்று புகார் செய்ததால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி அருகே உள்ளது டானா புதூர் இந்திரா நகர். இங்கு 35 வயதுடைய ராம்குமார் வசித்து வருகிறார். பனியன் கம்பனியில் வேலை செய்து வரும் இவருக்கு 28 வயதில் புவனேஸ்வரி என்ற மனைவியும் ஒரு மகளும் மகனும் உள்ளனர்.
ராம்குமாருக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. இவர் தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்றும் ராம்குமார் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் மனம் உடைந்து போன புவனேஸ்வரி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த அவருடைய உறவினர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக புவனேஸ்வரியை சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சைக்கு பின்னர் நேற்று மாலை அவர் உயிரிழந்தார்.
இந்தத் தகவலை அறிந்த புவனேஸ்வரியின் பெற்றோர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம் மகளின் சடலம் ஒப்படைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் டானாபுதூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது தந்தை சுப்பிரமணியம் மகளின் சடலத்தில் காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தந்தை ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே புன்செய் புளியம்பட்டி காவல்நிலையத்திற்கு சென்றார். அங்கு மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பது குறித்து புகார் தெரிவித்தார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புகாரை பதிவு செய்து கொண்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு புவனேஸ்வரியின் உடலை அனுப்பி வைத்தனர்.