அரக்கோணம் அருகே மன உளைச்சலால் பெற்ற மகனை கிணற்றில் வீசி கொன்ற பயங்கரம்.. தப்பியோடிய தந்தைக்கு வலை
பெற்ற மகனை கிணற்றில் வீசி தந்தை கொலை செய்துள்ளார்.
அரக்கோணம்: அரக்கோணம் அருகே தான் மன உளைச்சல் காரணமாக பெற்ற மகனை கிணற்றுக்குள் வீசி கொலை செய்துள்ளார் ஒரு தந்தை.
அரக்கோணம் அருகே உள்ள பகுதி கணபதிபுரம். இங்கு தன் இரு மகன்களுடன் வசித்து வருபவர் முனியப்பன். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என கூறப்படுகிறது. இதனால் 7 வயது, மற்றும் மூன்றரை வயது மகனை தன்னுடனே வைத்து வளர்த்து வந்துள்ளார். ஆனாலும் முனியப்பன் நீண்ட காலம் விரக்தியிலும், மன அழுத்தத்திலும் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று கடும் மன உளைச்சலில் இருந்த நிலையில், முனியப்பன் தன் இரண்டு மகன்களையும் வீட்டுக்கு பக்கத்திலுள்ள ஒரு கிணற்றில் வீசினார். ஆனால் 7 வயது மகன் தத்தளித்து கிணற்றிலிருந்து மேலே வந்துவிட்டான்.
மகன் மீண்டு கிணற்றிலிருந்து வந்ததை கண்ட முனியப்பன், அவனை இழுத்துக் கொண்டு போய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஆனால் தந்தையின் பிடியிலிருந்து தப்பித்து வெளியே ஓடிவந்த சிறுவன் பயத்தில் அலறி கத்தினான். இதனால் விரைந்து வந்த அக்கம்பபக்கத்தினர், வீட்டிற்குள் நுழைந்து தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்த முனியப்பனை காப்பாற்றினர்.
இதையடுத்து, தன் தம்பி கிணற்றில் மூழ்கி கொண்டிருக்கிறான் என சிறுவன கூறவும், அங்கிருந்தோர் சிறுவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அந்த மூன்றரை வயது சிறுவனை அவர்கள் சடலமாகத்தான் மீட்டனர். அக்கம்பக்கத்தினரை பார்த்ததும், தன் மகன் உயிரிழந்துவிட்டது தெரிந்ததும், முனியப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்ததுடன், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தப்பியோடிய முனியப்பனையும் தேடிவருகின்றனர்.