சீச்சீ.. இவரும் தந்தையா... மகளை நாசமாக்கிய நபருக்கு 46 ஆண்டு சிறை!
பெற்ற மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் தந்தைக்கு 46 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Recommended Video
திருச்சி : பெற்ற மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் காமுகனுக்கு 46 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த அரசங்குடி மேலவிளாங்குளம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் காமராஜ்,51. இவரது மனைவி பழனியம்மாள். இருவரும் கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகனுக்கும், ஒரு மகளுக்கும் திருமணம் ஆகி விட்டது.
கடந்த 2013 ஜூலை மாதம் பழனியம்மாள் வேலைக்கு சென்று விட்டார். 4வது மகன் பள்ளிக்கு சென்று விட்டார். ஒன்பதாம் வகுப்பு படித்த 3வது மகள் தனது வீட்டில் தனியாக இருந்தார்.
தந்தையால் கர்ப்பமான மகள்
குடிபோதையில் இருந்த காமராஜ் மகளை மிரட்டி, பலாத்காரம் செய்தார். தொடர்ந்து இதுபோல் பல முறை சிறுமியை மிரட்டி காமராஜ் பலாத்காரம் செய்து வந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் அளித்தனர். அப்போது சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
காவல் நிலையத்தில் புகார்
இதையடுத்து தாய் பழனியம்மாள் கடந்த 2014 ஆம் ஆண்டு திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி மகிளா நீதிமன்றத்தில்வழக்கு விசாரணை நடந்து வந்தது.
பெண் குழந்தை மரணம்
இதற்கிடையில் கடந்த 2015 மார்ச் 5ம் தேதி திண்டுக்கல் கஸ்தூரிபா அனாதை ஆஸ்ரமத்தில் தங்கியிருந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. சுபிக்ஷா என பெயரிட்டனர். ஜூன் மாதம் 26ஆம் தேதி மூச்சு திணறல் காரணமாக அந்த குழந்தையும் உயிரிழந்து விட்டது.
டிஎன்ஏ சோதனையில் உறுதி
திருச்சி மகிளா நீதிமன்றத்தில்வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் அக்டோபர் 12ம் தேதி ஆஸ்ரமத்தில் புதைக்கப்பட்ட அந்த குழந்தையின் கால் எலும்பை எடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் குழந்தை காமராஜ் மூலம் பிறந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
காமராஜூக்கு 46 ஆண்டு சிறை
திருச்சி மகிளா நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின், காமுகன் காமராஜூக்கு 3 ஆயுள் தண்டனை அதாவது 42 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. கொலை மிரட்டலுக்கு 1 ஆண்டு என மொத்தம் 43 ஆண்டு தண்டனை, அபராத தொகை கட்டாததால் கூடுதலாக மூன்றரை ஆண்டு என மொத்தம் நாற்பத்தி ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். சிறை தண்டனையை தனித்தனியே அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.