ஃபெரா வழக்கு - டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு - ஏப்.13க்கு ஒத்திவைப்பு
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் பதிவு செய்தது.
சென்னை: அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக டிடிவி தினகரன் மீது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தினகரன் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் பதிவு செய்தது. மேலும் டிடிவி தினகரன் தரப்பு வாதத்துக்காக வழக்கை ஏப்.13ஆம் தேதிக்கு நீதிபதி மலர்மதி ஒத்திவைத்தார்.
கடந்த 1996-97ம் ஆண்டு சசிகலா, டிடிவி. தினகரன், பாஸ்கரன் ஆகியோர் அப்போதய ஜெஜெ டிவிக்காக அமெரிக்காவில் உள்ள ரின் சார்ட் லிமிடெட் நிறுவனத்திடமும், சிங்கப்பூரில் உள்ள அப்புவெஸ் பாயின்ட் பிரைவேட் லிமிடட் நிறுவனத்திடமும் பணம் பரிவர்த்தனை செய்தனர். எந்த ஆவணமும் இல்லாமல் இந்த பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதால் 3 பேர் மீதும் அமலாக்க பிரிவினர் அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்குகள் மீது எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என கோரி 3 பேரும் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். மனுவை நீதிபதி தட்சிணாமூர்த்தி விசாரித்து கடந்த 2015 மே 18ல் தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் டிடிவி. தினகரன் மீதான 2 வழக்குகளிலும் குற்றச்சாட்டுக்கு சரியான ஆதாரம் இல்லை. எனவே, அவரை இரு வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்கிறேன். சசிகலா மீதான பரணி பீச் ரிசார்ட் வழக்கில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. எனவே, ஒரு வழக்கில் இருந்து மட்டும் சசிகலாவை விடுவிக்கிறேன் என்றார்.
நீதிபதி உத்தரவு
அமெரிக்காவில் உள்ள ரின்சார்ட் நிறுவனம் தொடர்பான வழக்கு, சிங்கப்பூரில் உள்ள அப்புவெஸ் பாயின்ட் பிரைவேட் லிமிடெட் தொடர்பான வழக்கு, இன்டர் புட் லிங்க் கம்பெனி தொடர்பான வழக்கில் இருந்து சசிகலாவை விடுவிக்க முடியாது. இந்த 3 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்க வேண்டும் என்று சசிகலா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
மேல்முறையீடு வழக்கு
டிடிவி. தினகரன் மற்றும் சசிகலாவை விடுவித்த எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி அமலாக்கப்பிரிவு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தார். மேலும், டிடிவி. தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
டிடிவி தினகரனுக்கு சம்மன்
இந்நிலையில், டிடிவி. தினகரன் மீதான 2 வழக்குகளிலும் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக எழும்பூர் 2வது பெருநகர குற்றவியல் நீதிமன்றம் (பொருளாதார குற்ற வழக்குகளுக்கான நீதிமன்றம்) அவருக்கு சம்மன் அனுப்பியது. அதன் அடிப்படையில், டிடிவி. தினகரன் கடந்த மார்ச் மாதம் எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் மலர்மதி முன்னிலையில் ஆஜரானார். அப்போது, மாஜிஸ்திரேட், இந்த வழக்குகளில் டிடிவி. தினகரன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
அப்பீல் செய்ய முடிவு
அதற்கு டிடிவி. தினகரன் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.குமார் மற்றும் வக்கீல் ஜீனசேனன் ஆகியோர், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய உள்ளோம் என்று மாஜிஸ்திரேட்டிடம் கூறினர். இதை கேட்ட மாஜிஸ்திரேட், வரும் 22ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைக்கிறேன். அன்று டிடிவி. தினகரன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அதற்குள் உச்ச நீதிமன்றத்தில் நீங்கள் அப்பீல் செய்யலாம் என்று உத்தரவிட்டார்.
டிடிவி தினகரன் ஆஜராகவில்லை
கடந்த 22ஆம் தேதி டி.டி.வி.தினகரன் ஆஜராகவில்லை. மேலும், அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தேர்தல் பணியின் காரணமாக வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததால் நீதிபதி மலர்மதி தினகரன் தரப்பு வாதத்தை தள்ளுபடி செய்தார். மேலும் வழக்கு தொடர்ந்து நடைபெறும் எனவும், தினகரன் தொடர்ந்து ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
நீதிபதி கண்டனம்
எனினும் டிடிவி தினகரன் ஆஜராகவில்லை. இதற்கு நீதிபதி மலர்மதி கடும் அதிருப்தி தெரிவித்தார். தொடர்ந்து வழக்கில் தினகரன் ஆஜராகாமல் இருப்பது கண்டனத்திற்குரியது எனவும், ஏப்ரல் 10 ஆம் தேதி டி.டி.வி தினகரன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் எனவும், அதுவே அவருக்கு இறுதி வாய்ப்பு எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
ஆஜராக உத்தரவு
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருவதால் அந்நிய செலாவணி வழக்கில் ஆஜராக 6 வார காலம் அவகாசம் தரவேண்டும் என தினகரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தினகரன் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது எனவும் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் குறிப்பிட்டபடி ஏப்ரல் 10 ஆம் தேதி தினகரன் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
குற்றச்சாட்டு பதிவு
எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் பதிவு செய்தது. டிடிவி தினகரன் தரப்பு வாதத்துக்காக வழக்கை ஏப்.13ஆம் தேதிக்கு நீதிபதி மலர்மதி ஒத்திவைத்தார்.