பள்ளி சத்துணவில் பல்லி விழுந்ததாக புகார்.. பாப்பம்மாள் மீது போலீஸ் வழக்குப்பதிவு
திருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளி சத்துணவில் பல்லி விழுந்ததால் தலித் பெண் சமையலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவினாசி: அவினாசி அருகே திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு பள்ளி சத்துணவில் பல்லி விழுந்ததற்காக பெண் சமையலர் பாப்பம்மாள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே உள்ள திருமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த தலித் சமூகத்தை சேர்ந்த பாப்பம்மாள் கடந்த மாதம் சத்துணவு சமையலராகப் பணி நியமனம் செய்யப்பட்டார்.
பாப்பம்மாள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் பள்ளியில் சத்துணவு சமைப்பதற்கு அந்த ஊரைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்து பள்ளியை முற்றுகையிட்டனர்.
ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பைத் தொடர்ந்து, அவினாசி வட்டார வளர்ச்சி அலுவலர் தலித் பெண் சமையலர் பாப்பம்மாளை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தலித் அமைப்புகள் பாப்பம்மாளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.
இவர்களின் போராட்டத்தின் விளைவாக பாப்பம்மாள் மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்தப்பட்டார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த திருமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தைச் சேந்த 90க்கும் மேற்பட்டோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆகஸ்ட் 7 ஆம் தேதி தலித் பெண் சமையலர் பாப்பம்மாள் வழக்கம்போல, திருமலைகவுண்டன்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் சத்துணவு சமைத்துள்ளார். சமைத்தபின் அதை சாப்பிட்ட குழந்தைகள் சிலருக்கு வாந்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் சத்துணவில் பல்லி விழுந்தது என்று கூறப்படுகிறது. சாப்பாட்டில் பல்லி விழுந்தது அறியாமல் சமையல் செய்த பாப்பம்மாளை கண்டித்த அப்பள்ளியின் தலைமை ஆசிரியை சசிகலா, அவினாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா, பாப்பம்மாள் மீது அளித்த புகாரின் பேரில், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கவனக் குறைவாக சமையல் செய்ததற்காக அவினாசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அவினாசி குற்றப் பிரிவு போலீஸாரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியவதாவது, "கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் சமையலர் பாப்பம்மாள் சமைத்த உணவில் பள்ளி விழுந்ததாகவும் அதற்கு காரணம் அவர் கவனக் குறைவாக சமையல் செய்ததுதான் என்று பள்ளி தலைமை ஆசிரியை புகார் அளித்தார்.
புகாரின் பேரில், விசாரணை நடத்தினோம். அந்த பள்ளியில் சத்துணவு சமையல் செய்வதற்கு என தனியாக அறை எதுவும் இல்லை. மூன்று பக்கம் ஆஷ்பெக்டாஸ் சீட், ஒரு பக்கம் தென்னங்கீற்று வைத்து தடுக்கப்பட்டு ஒரு ஷெட் போல அமைக்கப்பட்டுள்ளது. சத்துணவு சமைப்பதற்கு என்று தனியாக ஒரு அறை இல்லாத நிலையில் பாப்பம்மாள் சமைத்து வந்துள்ளார். மேலும், நாங்கள் பல்லி விழுந்ததாக சொல்லப்பட்ட உணவை சேகரித்து அதில் விஷத் தன்மை உள்ளதா என்று ஆய்வு செய்வதற்கு நீதிமன்றம் மூலமாக கோவையில் உள்ள பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவு வந்த பிறகுதான் எதுவும் கூற முடியும் என்று கூறினார்.
இதுறித்து தலித் சிந்தனையாளரும் செயல்பாட்டாளருமான ஸ்டாலின் ராஜாங்கத்திடம் கேட்டோம். அவர் கூறியதாவது: இதனை சத்துணவில் வெறும் பல்லி விழுந்த விஷயமாக பார்க்க கூடாது. உண்மையில் சாப்பாட்டில் தானாக பல்லி விழுந்ததா? என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும். இதற்கு முன்பு அரசு பள்ளி சத்துணவில் பல்லி விழுந்து சாப்பிட்ட மாணவர்களுக்கு எதுவும் ஆகாத நிலையில், சமையலர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்ததாக நானறிந்த வரையில் அப்படி முன்மாதிரி சம்பவங்கள் எதுவும் இல்லை என்றார்.