ஏற்காடு இடைத் தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் மாறன் மீது வழக்கு!

சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதிக்கு வருகின்ற டிசம்பர் மாதம் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் வெ.மாறனும், அ.தி.மு.க. சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. எஸ்.பெருமாளின் மனைவி சரோஜாவும் போட்டியிடுகின்றனர்.
கட்சித் தலைமை தன்னை வேட்பாளராக அறிவித்தது முதல் சேலம் மாவட்டத்தில் உள்ள தி.மு.க.வின் முக்கியப் பிரமுகர்களை, மாறன் நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.
மேலும், நேற்று முன்தினம் அயோத்தியாபட்டினம் ஒன்றியத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். நேற்று 2வது நாளாக வாழப்பாடி பகுதியில் உள்ள கிராமங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி அதிகமான வாகனங்களில் சென்றதாக, மாறன் மீது கிராம நிர்வாக அலுவலர்கள் அய்யனார் மற்றும் ராஜேஸ்வரன், வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கடந்த 22 ஆம் தேதியன்று கட்சித் தொண்டர்களை அழைத்துக் கொண்டு 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வாழப்பாடியிலிருந்து ஆத்தூர் நோக்கி மாறன் சென்றதாக அந்த புகாரில் அவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, வாழப்பாடி காவல் ஆய்வாளர் சிவக்குமார், தி.மு.க. வேட்பாளர் மாறன் மீது தேர்தல் நடத்தை விதியை மீறியதாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பிரச்சாரத்தை தொடங்கிய 2வது நாளே மாறன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பது தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications