திருப்புவனம் அஜித்குமார் மரணம்: "உயிர் போகும் என தெரிந்தே அடித்துள்ளனர்".. FIR-ல் முக்கிய திருத்தம்!
சிவகங்கை: மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாரை, மூர்க்கத்தனமாக தாக்கிய போலீசார் மரணம் ஏற்படும் எனத் தெரிந்தே, அவரை கடுமையாக தாக்கி உள்ளனர் என எஃப்.ஐ.ஆரில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவர் நகை காணாமல் போனது தொடர்பாக பெண் ஒருவர் அளித்த புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது கடந்த ஜூன் 28 ஆம் தேதி அடித்தே கொலை செய்யப்பட்டார்.

கஸ்டடி கொலை
இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், சிபிஐ அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று நீதிமன்ற காவலில் இருந்த 5 தனிப்படைக் காவலர்களையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், சிபிஐ அதிகாரிகள் 5 தனிப்படை காவலர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
சிபிஐ விசாரணை
விசாரணையின் போது சிபிஐ அதிகாரிகள், யாருடைய உத்தரவின் பேரில் அஜித் குமாரை விசாரணை செய்தீர்கள் ? அஜித் குமாரை அடித்து துன்புறுத்தியது ஏன்? காயமடைந்த அஜித் குமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாதது ஏன்? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி தனிப்படை காவலர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் மதுரை சிபிஐ அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
மிளகாய்ப்பொடி
மடப்புரம் கடையில் மிளாய்பொடி வாங்கி, அதை அஜித்குமார் மீது துாவி சித்ரவதை செய்ததாக போலீசார் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சி.பி.ஐ அதிகாரிகள், மடப்புரத்தில் உள்ள கடைக்காரரிடம் நேற்று விசாரணை நடத்தினர். கடைக்காரர், தனிப்படை போலீசார் ஒரு பாக்கெட் மிளாய் பொடி மற்றும் இரண்டு தண்ணீர் பாட்டில்கள் வாங்கியதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் குமாரின் சகோதரர் நவீன் குமார், அஜித் குமாரின் நண்பர்களான ஆட்டோ ஓட்டுநர் அருண் குமார், வினோத், பிரவீன், கார்த்திக் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அஜித் குமார் மீது நகை திருட்டுப் புகார் கொடுத்த நிகிதா மற்றும் அவரது தாயாரிடம் சிபிஐ அதிகாரிகள் அண்மையில் விசாரணை நடத்தினர். மேலும், அஜித்குமார் தாக்கப்பட்ட கோயில் கோசாலையில் ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள், அதை வீடியோவாகப் படமாக்கப்பட்ட கழிவறையில் இருந்தும் கோசாலையை பார்வையிட்டனர்.
எஃப்.ஐ.ஆரில் திருத்தம்
இந்த வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில், வலிப்பு ஏற்பட்டு அஜித் குமார் மரணித்ததாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருடிய குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததால் தனிப்படை காவலர்கள் 5 பேர், அஜித் குமார் உயிர் போகும் எனத் தெரிந்தே அவரை கடுமையாக அடித்ததாக எப்.ஐ.ஆரில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications