சென்னை பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ.. கரும்புகையால் மூச்சுத் திணறல்
சென்னை: சென்னை செளகார்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் பொருள், நறுமண திரவியம் ஆகியவை வைத்திருக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கரும்புகையால் பெரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அக்கம் பக்கம் வசித்த மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள்.
செளகார்பேட்டை, நாராயணப்பா தெருவில் 3 மாடிகள் கொண்ட தனியார் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் வாசனை திரவியம், அழகுசாதனம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளன.

இங்கு இன்று மாலை 4.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் 13 வண்டிகளுடன் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர்.

தெரு மிகவும் குறுகியது என்பதால் பெரிய தீயணைப்பு வண்டிகள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடோனில் உள்ள மூன்று தளங்களுக்கும் தீ பரவியதால் கரும்புகை அதிகமாக வெளியேறியது. இதனால், தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
புகை அதிகமாக வெளியேறியதால் அந்த பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வெளியேற்றப்பட்டனர். தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு வீரர்களும் கூட மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர்.












Click it and Unblock the Notifications