சாலையில் கொட்டிய அமிலம்: செங்கோட்டை அரிஹரா ஆற்றில் கலந்ததால் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்
நெல்லை: லாரியிலிருந்து சாலையில் கொட்டி ஆசிட் செங்கோட்டை அரிஹரா ஆற்றில் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்தன. இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியை அடுத்த ஆறுமுகநேரி இ.சி.டபுள்யு நிறுவனத்தில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு 20 ஆயிரம் லிட்டர் ஹைட்ரோ குளோரின் ஆசிட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்றுகொண்டிருந்தது. லாரியை ஆறுமுகநேரியைச் சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டிச் சென்றார்.
செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலை அருகே வரும்போது லாரியின் இரண்டு பகுதிகளில் இருந்து கசிவு ஏற்பட்டது. இதையடுத்து ஆசிட் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் உடனடியாக டிரைவருக்கு தெரியபடுத்த அவர் உடனடியாக லாரியை சாலை ஓரத்தில் நிறுத்தினார். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினரும், போலீசாரும் விரைந்து வந்து லாரி ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் "ஹைட்ரோ குளோரின்" ஆசிட் அருகில் மக்கள் பயன்படுத்தும் அரிஹரா நதியில் கலந்ததால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து லாரியை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர் அதிகாரிகள். பின்னர் இரவு மாற்று வாகனம் கொண்டுவரப்பட்டு லாரியில் இருந்த ஆசிட் மாற்றப்பட்டது.

இதில் அதிகளவு ஆசிட் தரையில் கொட்டி அருகிலுள்ள ஆற்றில் கலந்தது. இதன் காரணமாக ஆற்று நீரில் ஆசிட் கலந்ததின் விளைவாக மீன்கள் செத்து மிதக்கத் தொடங்கியது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுரை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி மனோகரன், நெல்லை மாவட்ட அதிகாரி கிருபானந்த ராஜா மற்றும் செங்கோட்டை தாசில்தார் செல்வ நாயகம் மற்றும் அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தினர். மீன்கள் உயிரிழந்து கிடப்பதை பார்வையிட்டனர்.
பின்னர் சோதனைக்காக தண்ணீரின் மாதிரிகளை கேன்களில் எடுத்து சென்றனர். விவசாயிகள் கார் சாகுபடியை தொடங்க உள்ள நிலையில் ஆற்று நீரில் அமிலம் கலந்ததால் அதை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications