தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்கள் விலை உயர்வு: சில்லறை வியாபாரிகள் கடும் அவதி
மீன்கள் வரத்து குறைந்துள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி : மீன்கள் வரத்து குறைந்துள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சிறு வியாபாரிகள் மீன்களை வாங்கி விற்பனை செய்ய முடியாமல் திணறி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே கீழவைப்பார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்பகுதியில் கடந்த சில நாட்களாக மீன்பாடு குறைந்து மீன் ஏல கூடம் வெறிச்சோடி காணப்படுகிறது.

மீன் வரத்து குறைந்துள்ளதால் மீன்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போது கடலுக்கு செல்லும் மீனவர்கள் வலையில் சாளை, அயிலை, பாறை, கீரிமீன், ஊளி போன்ற குறைந்த அளவிலான மீன்களே சிக்கி வருகின்றன.
இதனால் சாளை வரத்து அதிகமாக காணப்படுகிறது. மற்ற மீன்கள் வரத்து குறைவாகவே இருப்பதால், விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து காணப்படுகிறது. கிலோ ரூ.300க்கும் ஏலம் போகும் ஊளி மீன் தற்போது ரூ.450 முதல் ரூ.600 வரை விலை போகிறது.
10 கிலோவுக்கும் மேல் எடை உள்ள ஒரு சாளை மீன் ரூ.1200லிருந்து ரூ.1400 வரை விலை போகிறது. இதனால் சிறு வியாபாரிகள் மீன்கள் கிடைக்காமலும், கிடைத்த மீன்களை குறைந்த விலைக்கு விற்க முடியாமலும் தவித்து வருகின்றனர். வருகின்ற நாட்களில் மீன்பாடு அதிகரித்தால் மட்டுமே இதை சமாளிக்க முடியும் என்று அவர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications