"பொறுக்கி" சாமியை தூக்கி உள்ளே போடுங்கள்.. மீனவர்கள் ஆவேசம்
தமிழர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேஸ்வரம்: டுவிட்டரில் மீனவர்களுக்கு எதிராக சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்த பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றோரு மீனவர் சரோனுக்கு கை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து மீனவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் படுகொலை செய்தது தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் ''தமிழகத்தில் உள்ள பொறுக்கிகள் அனைவரும் சாக்கடைக்குள் ஒளிந்து கொள்வதற்கு பதிலாக கட்டுமரத்தில் சென்று இலங்கை கடற்படையுடன் சண்டையிடுங்கள் என தெரிவித்துள்ளார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்தநிலையில் மீனவர்களுக்கு எதிராக சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர்கள் பிரதிநிதி ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறுகையில், தமிழக மீனவர்களை சிறைப்பிடிக்கவும், மீனவர்களின் படகுகளை கைப்பற்றவும் இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கியதே பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரணிமணியன் சுவாமி தான் என்பதை ஏற்கெனவே அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.
தற்போது மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்ததைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தமிழக முதல்வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் மீனவர்களுக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளது தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு எதிராகவும், மீனவர்களின் வாழ்வாதரத்தை முடக்கிய குற்றத்திற்காகவும், தமிழர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications