கூடங்குளத்திற்கு எதிராக அக். 18ல் பிரமாண்ட பேரணி- ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி: கூடங்குளம் அணுஉலையை நிரத்தரமாக மூடக்கோரி அக்டோபர் மாதம் 18ம் தேதி தூத்துக்குடியில் பேரணியுடன் கூடிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவ ஐக்கிய முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் மைக்கேல் தூத்துக்குடியில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தென்தமிழகத்தை சுடுகாடாக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தினை உடனடியாக மூடவேண்டும், நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட கடற்கரைகளில் நடந்துவரும் கார்னட் மணல்கொள்ளைக்கு நிரத்தரமாக தடை விதிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அக்டோபர் மாதம் 18ம் தேதி பேரணியுடன் கூடிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை முன்பிருந்து துவங்கும் பேரணி தூத்துக்குடி ரோச் விக்டோரியா சிலை முன்பு நிறைவடைகிறது. அதன்பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் சேர்த்து 34 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள்.
மணல்கொள்ளையால் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து அறிந்த தமிழக முதல்வர் அதனை ஆய்வு செய்திட குழு ஒன்று அமைத்தார். அந்த குழு ஒரு மாத காலத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த குழுவின் நிலை குறித்து தமிழக முதல்வர் தெரியப்படுத்தவேண்டும் என்றார்.
பேட்டியின் போது மீனவ ஐக்கிய முன்னணியின் இணைப்பொதுச்செயலாளர் மங்கையர்செல்வன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் சேவியர்வாஸ், செயலாளர் சுபாஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.