நவ.5 பேச்சுவார்த்தையில் மீனவர் பிரச்சனைக்கு முடிவு தெரியுமா.. என்ன சொல்கிறார்கள் மீனவ பிரதிநிதிகள்?
நாளை மறுநாள் நடைபெறும் இந்திய இலங்கை உயர்மட்ட குழுக் கூட்டத்தில் மீனவர்கள் பிரச்சனைகள் தீரும் என்று தமிழக மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னை: டெல்லியில் நடைபெற்ற இந்திய-இலங்கை மீன பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகவும், நவ. 5ம் தேதி நடைபெற உள்ள இருநாட்டு உயர்மட்டக் குழு கூட்டத்தில் மீனவர்கள் பிரச்சனைகளுக்கு முடிவுகள் எட்டப்படும் என்றும் தமிழக மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நேற்று டெல்லியில், இலங்கை மீனவர்கள் மற்றும் தமிழக மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவ பிரநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து 10 முக்கிய மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளும், மீனவளத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமாரும் கலந்து கொண்டார்கள்.
இந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ள தமிழக மீனவ பிரதிநிதிகள், டெல்லியில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தை திருப்தி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், இலங்கை மீனவர்களுடனான பேச்சுவார்த்தை மிகவும் ஆக்கப் பூர்வமாக இருந்ததாகவும், சிறையில் இருக்கும்இருநாட்டு மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் பரஸ்பரம் ஒப்படைக்க இருநாடுகளும் ஒத்துக் கொண்டதாகவும் மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
நாளை மறுநாள் நடைபெற உள்ள இருநாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டத்தில் இருநாட்டு மீனவர் பிரச்சனையில் நிரந்தர தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக மீனவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போது, கச்சத்தீவு பிரச்னை, இலங்கையில் பல மாதங்களாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை மீட்பது, தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்கச் செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும், சர்வதேச கடல் பகுதி அருகே மீன்பிடிப்பது, மீனவர்களின் வாழ்வாதாரம், இரு நாட்டு கடற்படையினரின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தொடர்பாகவும் பேசப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மீனவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் வரும் 5ம் தேதி நடைபெற உள்ள உயர்மட்டக் குழு கூட்டத்தில் முன் வைத்து பேசப்படும். அதன் பின்னர்தான், மீனவர்கள் பிரச்சனைகளுக்கு ஒரு சுமூக தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.