அனிதாவிற்கு அஞ்சலி.. மரணத்திற்கு நீதி கோரி.. சென்னையில் ஒன்று கூடிய ஐடி துறையினர்!
மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் ஐடி துறையினர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியை நடத்தினர்.
சென்னை : அரியலூர் மாணவி அனிதாவிற்கு சோழிங்கநல்லூரில் 300க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.
அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஐடி பணியாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் ஒன்று கூடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நேற்று மாலை சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்கா முன்பு, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் (FITE ) பெண்கள் பிரிவு சார்பில், "மருத்துவர் அனிதாவிற்காக அஞ்சலி செலுத்தும் ஒன்றுகூடல்" நிகழ்வு நடைபெற்றது.
ஐடி பணியாளர்களுக்கான கூட்டமைப்பின் தலைவர் வசுமதி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. இது குறித்து அவர்கள் கூறியுள்ளதாவது : அதில் கடந்த வாரம் 01 செப்டம்பர் 2017 அன்று, மாணவி அனிதாவை நீட் தேர்வின் அநீதி தற்கொலைக்கு தள்ளியது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதற்கு முழுப் பொறுப்பும் இந்திய, தமிழக அரசுகளே என்று தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

போராட்டத்தில் இணைந்த ஐடி ஊழியர்கள்
தொடர்ச்சியாக நடந்து வரும் இப்போராட்டங்களில் இன்று ஐ.டி துறையினரும் தங்களை இணைத்துக் கொண்டனர். பன்னிரண்டாம் வகுப்பில் 1200 -க்கு 1176 மதிப்பெண் பெற்ற அனிதாவை கொன்றுவிட்டு, நீட் அனைவருக்கும் பொதுவான தேர்வு என்று இந்திய அரசு பொய் பரப்புரை செய்து வருகிறது.
Recommended Video


ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் நீட்
1200 -க்கு 600 மதிப்பெண், அதாவது 50 விழுக்காடு மதிப்பெண் பெற்றாலே ஒரு மாணவன் நீட் எழுத தகுதியடைவன், நீட் -டில் தேரிவிட்டால் அவன் மருத்துவரும் ஆகிவிடமுடியும். இவ்வாறு மருத்துவத் துறையில், மருத்துவர்களின் தரத்தை குறைப்பதோடு, சமத்துவமான கல்வி இல்லாத நாட்டில் சாதிய ஏற்றத்தாழ்வை நிலைநிறுத்தவே "நீட்" தேர்வை கொண்டு வந்துள்ளது இந்திய ஒன்றிய அரசு.

கண்டனம்
அதன் பொருட்டுதான் AIIMS , JIPMER கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்த இந்திய அரசு, தமிழ்நாட்டிற்கு விலக்கு கொடுக்க மறுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வில், திரைப்பட இயக்குனர் வ.கவுதமன், கல்வியாளர் பிரின்சு கசேந்திர பாபு உள்ளிட்டோர் பங்கேற்று இந்திய அரசின் வஞ்சகத்தையும், தமிழக அரசின் செயல்படா திறனை கண்டித்து உரையாற்றினார்.

மெழுகுவர்த்தி அஞ்சலி
இந்த ஒன்றுகூடலில் பல்வேறு ஐ.டி நிறுவனங்களைச் சேர்ந்த 300 -க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். அவர்கள் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும்!, "நீட்" தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு வேண்டும்! என்று வலியுறுத்தினர். இதே போன்று வருங்காலங்களில் ஏற்படாமல் இருக்க பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வித் துறையை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்! என்றும் ஐடி ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் இறுதியாக மருத்துவர் அனிதாவிற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications