மு.க. அழகிரி ஆதரவாளர்கள் மேலும் 5 பேர் சஸ்பென்ட்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் மேலும் 5 பேரை திமுக தலைமை சஸ்பென்ட் செய்துள்ளது.
மதுரையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியதால் ஒட்டுமொத்த மதுரை மாநகர் மாவட்ட திமுக அமைப்புகளே கலைக்கப்பட்டது. பின்னர் மதுரை மாநகர் மாவட்ட திமுகவுக்கு பொறுப்புக் குழு நியமிக்கப்பட்டது.
அத்துடன் மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் 5 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்தும் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் அவ்வப்போது திமுக தலைமையை உசுப்பிவிடும் வகையில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை புறநகர் மாவட்ட செயலர் மூர்த்தி மீது கொட்டாம்பட்டி ஒன்றிய திமுக ஆதிதிராவிட அணி துணை அமைப்பாளர் முத்துவேல் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். போஸ்டர் ஒட்டியபோது தம்மை மூர்த்தி ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து மூர்த்தி மீது தீண்டாமை பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து கொட்டம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் அசோக்குமார், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வெள்ளையன், கொட்டாம்பட்டி ஒன்றிய ஆதிதிராவிட அணி துணை அமைப்பாளர் முத்துவேல், மாவட்ட துணை செயலாளர் எம்.எல்.ராஜ் ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
அடுத்தடுத்து மு.க. அழகிரி ஆதரவாளர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டு வருவது மதுரை திமுகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.