பெங்களூர் செல்ல ஸ்டாலினுக்கு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து தர ரெடி: பொன்.ராதாகிருஷ்ணன்
Recommended Video
சென்னை: மு.க.ஸ்டாலினுக்கும், திருநாவுக்கரசருக்கும் பெங்களூர் செல்ல சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து தர தயார் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களை சந்தித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து, குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்காக பிரதமர் மோடியின் அரசு கவனம் செலுத்துகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் பெங்களூர் சென்று கர்நாடக முதல்வரிடம் பேசி சம்மதம் பெறவேண்டும். தமிழக அரசின் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை பெங்களூருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன் வைக்கிறேன்.
கர்நாடகாவுக்கு சென்று முதல்வரிடம் பேச மு.க.ஸ்டாலின் மற்றும் திருநாவுக்கரசருக்காக சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து தருகிறோம். அவர்கள் செல்ல தயாரா என்று தெரிவிக்க வேண்டும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.