வேடசந்தூர் அருகே விமானம் மூலம் மலைகளில் ஆய்வு.. திடீர் திடீரென வட்டமிடும் விமானங்களால் மக்கள் பீதி
திண்டுக்கல் அருகே கனிமவளங்களை வெட்டி எடுப்பதற்காக விமானங்கள் மூலம் மலைப்பகுதிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கனிமவளங்களை வெட்டி எடுப்பதற்காக விமானங்கள் மூலம் மலைப்பகுதிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. திடீர் திடீரென விமானங்கள் மலைப்பகுதியை சுற்றி வட்டமடிப்பதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் - கரூர் மாவட்ட எல்லையில் உள்ள கருமலை, ரெங்கமலை பகுதிகளில் செம்பு, காரீயம், துத்தநாகம் உள்ளிட்ட கனிமவளங்கள் இருப்பதாக கூறி கடந்த சில மாதங்களாக மத்திய அரசின் நில அறிவியல்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதற்காக 3 ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரி கிராம மக்கள் மாவட்டட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இன்று 50 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது இத்திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிடாவிட்டால் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டு எச்சரிக்கையும் விடப்பட்டது.
ஆனால் கனிமவளங்களை வெட்டி எடுக்கும் பணி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளார். கருமலை மற்றும் ரெங்கமலையில் விமானம் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
கனிமவளங்களை வெட்டி எடுப்பதில் மத்திய அரசு படுதீவிரமாக ஈடுபட்டுள்ளது.
திடீர் திடீரென வந்து வட்டமிடும் விமானங்களால் பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி கனிமவளங்களை எடுப்பதில் மத்திய அரசு மும்முரமாக இறங்கியுள்ளதால் அங்கும் நெடுவாசல் போன்ற போராட்டம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.