திண்டுக்கல் மாவட்டத்தில் அணைகள் நிரம்பின- பல கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
திண்டுக்கல்: பருவமழை தொடர்ந்து பெய்ததால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் வேடசந்தூர், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதி கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் பழனி பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து 2450 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. குதிரையாறு அணையில் இருந்தும் 225 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சண்முகா நதி
அதேபோல் வரதமாநதி அணையிலிருந்து 1850 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் சண்முகா நதியில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சண்முகா நதி கரையோர பகுதி மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பரப்பலாறு அணை
ஒட்டன்சத்திரம் அருகே பரப்பலாறு அணை நிரம்பியதால் 500 கனஅடி தண்ணீர் நங்காஞ்சி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் கரையோரமான விருப்பாச்சி, தங்கச்சியம்மாபட்டி, ஜவ்வாதுபட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடகனாறு அணை
வேடசந்தூர் அருகே உள்ள குடகனாறு ஆற்றுக்கு சந்தனவர்த்தினி ஆறு, வரட்டாறு, மான்கோம்பை ஆறு, மாங்கரை ஆறு, ஆத்தூர் காமராஜர் அணை ஆகியவற்றில் இருந்து நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இதனால் 10.01 அடி இருந்த அழகாபுரி குடகனாறு அணை கடந்த சில வாரங்களில் கிடுகிடுவென உயர்ந்து 23 அடியாக உயர்ந்துள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 27. இருப்பினும் குடகனாறு அணை மற்றும் அதன் ஷட்டர்கள் மிக பலவீனமாக இருப்பதால் 2007ஆம் ஆண்டைப் போல அணை உடைந்து ஒட்டுமொத்த நீரும் வெளியேறிவிடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
வேடசந்தூரில்...
வேடசந்தூர் நகரத்தில் குடகனாறு ஆற்று நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டு ஓடுகிறது. தற்போது கரையோர குடியிருப்புகளை தொட்டு செல்கிறது ஆற்று நீர். இதனால் கரையோரம் உள்ள குங்குமக்காளியம்மன்கோவில், அண்ணாநகர், மார்க்கெட் ரோடு, ராஜாகோபாலபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.