சுனாமியாய் சுழன்றடித்த வெள்ளம்... வானமே கூரையாக பூமியே வீடாக வாழும் சென்னை மக்கள்!
சென்னை: சென்னையில் எந்தப் பக்கம் திரும்பினாலும் சோகம் கவிழ்ந்த முகத்துடன் நகரும் மக்களையே காண முடிகிறது.
வாழ்நாள் முழுவதும் உழைத்து, மகன், மகளைப் படிக்க வைத்து, மீதியிருந்த பணத்தில் வீடுகளைக் கட்டி முதுமையை சுகமாகக் கழிக்கலாம் என்று எண்ணியிருந்தவர்களின் நிம்மதியில் நீரை ஊற்றியுள்ளது வெள்ளம்.
இதேபோல், இளமையிலேயே வங்கிக் கடன் வாங்கி சொந்த வீடு வாங்கியவர்களின் கனவுகளையும் சிதைத்துள்ளது இந்த வெள்ளம்.

நீரில் கரைந்த சேமிப்புகள்...
உயிர் தப்பினால் போதும் என வெள்ளத்தில் இருந்து வெளியேறிய மக்கள், வெள்ள நீர் மெல்ல மெல்ல வடிந்து வரும் நிலையில் மீண்டும் வீடுகளுக்குச் சென்று தங்களது சேமிப்புகள் நீரில் பாழானதைக் கண்டு கண்ணீர் வடித்து வருகின்றனர்.

என்ன செய்வது புத்தகங்களுக்கு...
ஹோம்வொர்க் செய்யலைனா மிஸ் திட்டுவாங்க என பயந்து பயந்து வீட்டுப்பாடம் செய்த மாணவர்கள், நீரில் அடித்துச் செல்லப்பட்ட தங்கள் புத்தகங்களை தேடும் காட்சிகள் மனதை உருக்குகின்றன.

தீயா வேலை செய்யுமா சூரியன்...
கையில் சிக்கிய புத்தகங்களைக் காய வைக்கவாவது சூரியன் வராதா, வெயில் அடிக்காதா என்ற ஏக்கம் அவர்களின் முகத்தில் காணப்படுகிறது. பள்ளி மீண்டும் திறந்ததும், புத்தகம் இல்லாமல் போனால் ஆசிரியர் திட்டுவாரோ என்ற அச்சமும் விவரமறியா அந்த பிஞ்சுகளின் மனதில் மீதமுள்ளது.

வீட்டைச் சுற்றிலும் நீர்...
கேரளாவில் பெரும்பாலான வீடுகளுக்குப் பின்புறம் குளம் அல்லது ஓடை என ஏதாவது நீர் நிலை இருக்கும். எனவே, மக்கள் அவற்றில் குளித்து, துணி துவைப்பர். தற்போது அந்த பாக்கியம் நகரத்து மக்களுக்கும் கிடைத்துள்ளது.

துணி துவைக்க...
மின்சாரம் இல்லாததால் வீட்டில் மோட்டர் போட இயலாத நிலை. எனவே, வீட்டைச் சுற்றியுள்ள நீரிலேயே தங்கள் துணிகளைத் துவைத்துக் கொள்கின்றனர் சில இடங்களில்.

உருக்குலைந்த வீடுகள்...
வீடு என்பது வெறும் செங்கலும், சிமெண்டும், மணலும் சேர்த்துக் கட்டப்பட்ட கட்டிடம் மட்டுமல்ல, அது ஒரு உணர்வுப்பூர்வமான இடம். அத்தகைய தங்களது வீடுகள் வெள்ளத்தில் உருக்குலைந்து போயுள்ளதை, வெள்ளம் குறைந்து வரும் நிலையில் மக்கள் வேதனையுடன் பார்த்து வருகின்றனர்.

கட்டிலாவது தேறுமா...
இதுவரை தாங்கள் பயன்படுத்திய பீரோ, கட்டில் மற்றும் மின் சாதனப் பொருட்கள் எல்லாம் வீணாகி விட்டாலும், அவற்றில் முடிந்தவற்றை சரி செய்து மீண்டும் பயன்படுத்தும் முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கையேந்தும் குழந்தைகள்...
ஒவ்வொரு பெற்றோருக்குமே தங்களது குழந்தைகள் இளவரசன், இளவரசிகள் தான். தாங்கள் எவ்வளவு கஷ்டப் பட்டாலும் தங்கள் குழந்தைகள் முடிந்தவரை சொகுசாக வாழ வேண்டும் என்பதே அவர்களது விருப்பமாக இருக்கும். ஆனால், தங்கள் கண் எதிரிலேயே அவர்கள் மற்றவர்களிடம் உணவுக்காக கையேந்தும் நிலையைக் கண்டு பெற்றோர்கள் உள்ளுக்குள் நொறுங்கிப் போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications