அக்டோபரில் முதல்முறையாக மீனாட்சி அம்மன் கோவிலில் புகுந்த வெள்ளநீர்.. இப்போது தீ.. பீதியில் மக்கள்!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக் கோயிலாக உள்ளது. இந்தக் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன்.
இத்தலத்தில் முதல் பூசை அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது. சுந்தரேஸ்வரர் கோவில் புதனுக்குரிய ஸ்தலமாகவும் பார்க்கப்படுகிறது.
அரசுடன் தொடர்பு..
புதன் ஆட்சிக்குரியவர் என்பதால் இக்கோயில் அரசு மற்றும் அரசாள்பவர்களுடன் தொடர்புபடுத்தி பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தக்கோவிலில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட கடைகள் தீக்கிரையாயின.
ஆயிரங்கால் மண்டபம்
ஆயிரங்கால் மண்டபத்தின் தூண்கள் மற்றும் மேற்கூரை சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
இதுபோன்ற அசம்பாவிதம்..
கண்ணகி மதுரையை எரித்தப்பிறகு இப்போதுதான் கோவிலில் இதுபோன்ற தீ விபத்து அசம்பாவிதம் நடைபெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளநீர் புகுந்ததில்லை
கடந்த அக்டோபர் மாதத்தில் மதுரையில் கொட்டிய பலத்த மழையால் தீ விபத்து ஏற்பட்ட இதே பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. இதுவரை கோவிலுக்குள் இப்படி வெள்ள நீர் புகுந்ததில்லை என்று கூறிய மக்கள் இவ்வளவு நீரை கோவிலுக்குள் பார்த்ததில்லை என்றும் சாமி குத்தம் ஏதும் உள்ளதோ என்றும் அச்சமடைந்தனர்.
எதற்கான அறிகுறியோ..
வெள்ளநீர் புகுந்து 3 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற தீ விபத்து எப்போதும் ஏற்பட்டதில்லை என்று கூறியுள்ள மக்கள் இது எதற்கான அறிகுறியோ என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.