நீங்க...? சென்னைவாசிகளுக்கு அக்கம் பக்கத்தாரை அறிமுகப்படுத்திய வெள்ளம்!
சென்னை: வெளுத்து வாங்கிய பேய்மழையால் சென்னை மக்களுக்கு பாதிப்புகளைப் போலவே, ஒரு நன்மையும் கிடைத்துள்ளது. நன்மையா அது என்ன என்று கேட்கிறீர்களா? ஆம் வானத்தில் இருந்து பெய்த மழையால், பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பக்கத்து வீட்டுக்காரர்களின் சினேகம் பலப்பட்டுள்ளது.
கிராமத்து வாழ்க்கைப் போல் அமைதியானதாக இருப்பதில்லை நகரத்து வாழ்க்கை. விடிந்தால் வேலைக்கு புறப்படும் மக்கள், பொழுது அடைந்த பின்னரே வீடு திரும்புகின்றனர். இதனால் பல இடங்களில் தங்களது பக்கத்து வீட்டுக்காரர் பெயர் கூட அவர்களுக்குத் தெரிவதில்லை.
இந்த சூழ்நிலையில் மழை அனைவரின் மனதையும் இணைத்துள்ளது.

ஒரே வீட்டில்...
மழை காரணமாக வீடுகளை விட்டு வெளியேற முடியாத அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள், தங்கள் தயக்கங்களை மீறி பல இடங்களில் ஒரே வீடுகளில் ஒன்றாக பொழுதுகளைக் கழித்தனர்.

சீரியல் இல்லாத நாட்கள்...
மின்சாரம் இல்லாததால், தொலைக்காட்சிகளின் ஆதிக்கங்கள் இல்லாமல், செல்போன்களை நோண்டாமல் ஒருவருக்கொருவர் பேசி மகிழ்ந்தனர். பல வீடுகளில் பெரியவர்களே ஒன்றாக சேர்ந்து செஸ், கேரம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடினர்.

தனி தைரியம்...
வெள்ள நீர் வடிந்தால் தான் வீட்டை விட்டு வெளியேற முடியும் என்ற சூழலில், இப்படி அனைவரும் ஒரே இடத்தில் கூடி இருந்தது பெரிய தைரியத்தைக் கொடுத்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

புத்துணர்வு...
வெளியில் மழை, வெள்ளம் என ஊரே அல்லோகலப் பட்ட நேரத்தில், ஆறுதலாக நமக்கு நாமே புத்துணர்வு முகாம் நடத்தியது போன்ற உணர்வை கடந்து போன இந்த சில நாட்கள் தந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

வாழும் மனிதநேயம்...
அதெப்படி என் வீட்டில் உங்கள் வீட்டு மரக்கிளை எட்டிப் பார்க்கலாம் என அடிதடியில் இறங்கியவர்கள் கூட, ஒருவருக்கொருவர் உணவுகளைப் பரிமாறி உணர்வுப்பூர்வமாக வாழ்ந்தது மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதற்கு சாட்சி.

மீட்புப் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள்...
எனக்கேன் வம்பு என விபத்துக்களைக் கண்டால் கூட விலகிச் செல்பவர்கள் நகரத்து மனிதர்கள் என்ற அவப்பெயரை அழித்து, மீட்புக் குழு வரும் வரை காத்திருக்காமல் களத்தில் இறங்கி, தங்களால் இயன்ற அளவு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நாங்களும் மனிதர்கள் தான் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் அவர்கள்.

நலந்தானா?
பல்வேறு காரணங்களால் வருடக்கணக்காக பேசிக் கொள்ளாத, அக்கம் பக்கத்தார் கூட ‘உங்க வீட்ல எல்லாரும் பத்திரமா? சாப்பிட ஏதாவது வேணுமா?' என கேட்டுக் கொண்ட கணங்கள் கண்களில் நீர் வரவழைக்கும் உணர்ச்சிகரமானவை.

கல்லோடு பறந்து வந்த உணவுகள்...
வெள்ள நீர் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேற முடியாத மக்கள், அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு இட்லி உள்ளிட்ட உணவுகளை பிளாஸ்டிக் கவரில் வைத்து, கூடவே ஒரு கல்லையும் அதனுடன் கட்டி, அதனை மொட்டை மாடியில் இருந்து தூக்கி எறிந்து உதவினர்.

நட்பு பத்திரம்...
மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்ட பின்னர் பலர் தங்களது அக்கம்பக்கத்தாரின் செல்போன் எண்களை கேட்டு வாங்கி சேமித்துக் கொண்ட காட்சிகளையும் காண முடிந்தது. அதேபோல், நலமாக ஊர் போய் சேர்ந்தீர்களா என்ற விசாரிப்புகள், அவர்களது இந்த நட்பு எதிர்காலத்திலும் தொடரும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.
வீடுகளைப் பிரித்த வெள்ளம்... மக்கள் உள்ளங்களை இணைத்தது என்றால் மிகையில்லை!












Click it and Unblock the Notifications