கடையநல்லூரில் சிக்கிய ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கேரள எம்.எல்.ஏ.வின் போஸ்டர்கள்
தென்காசி: கேரள மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவதாஸ் நாயரின் புகைப்படம் அடங்கிய ரூ.5 லட்சம் மதிப்புள்ள போஸ்டர்கள் கடையநல்லூரில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளது.
தமிழகம், புதுவை, கேரளா, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர்களுக்கு அன்பளிப்பு, இலவச பொருட்கள் வழங்குவது உள்ளிட்டவைகளை கண்காணிக்க பறக்கும் படை உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை கடையநல்லூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட இ.விளக்கு பகுதியில் பறக்கும் படை அதிகாரி சக்தி அனுபமா, காவல்துறை துணை ஆய்வாளர் அலெக்ஸ் மேனன், ஏட்டுக்கள் கருப்பசாமி, முத்து கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு வந்த வாகனத்தை நிறுத்தி நடத்தி சோதனை செய்தனர். சோதனையில் கேரள மாநிலம் பத்தினம்திட்டா தொகுதியின் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினராக இருக்கும் சிவதாஸ் நாயரின் புகைப்படம், கட்சியின் சின்னம் அடங்கிய 60 போஸ்டர் பண்டல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போஸ்டர்களின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

போஸ்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு செங்கோட்டை தாலுகா அலுவலகம் கொண்டு வரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சிவதாஸ் நாயர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.
கேரளாவில் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகள் எதுவும் முடிவாகாத நிலையில் ஆளும் கட்சி சட்டசபை உறுப்பினர் போஸ்டர் அடித்து பிடிப்பட்ட சம்பவம் இருமாநில எல்லைப் பகுதியில் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications