மதுரை அருகே ஆம்னி பேருந்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ50 லட்சம் பணம் பறிமுதல்!
மதுரை: தனியார் ஆம்னி பேருந்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட 50 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை 60 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3 கிலோ தங்க நகைக்கள், வெள்ளிக்கொலுசுகள், மூக்குத்திகள், பரிசுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில், தேர்தல் பறக்கும்படை அலுவலர் வெங்கடேசன், பக்கீர் முகமது தலைமையிலான போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சென்னையில் இருந்து ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. இதில் மதுரையை சேர்ந்த ராதா என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் 50 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை கருவூலத்தில் ஒப்படைத்தனர். ஆவணங்களின்றி பணத்தை கொண்டு சென்ற ராதாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications