வாணியம்பாடியில் வாக்காளர்களுக்கு பணம்! பறக்கும் படையை பார்த்ததும் தெறித்து ஓடிய மர்மநபர்கள்
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே இருவேறு இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த நபர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை கண்டவுடன் பணத்தை வீசிவிட்டு தப்பி ஓடியதை அடுத்து, அங்கிருந்த ரூ 2.38 லட்சம் மதிப்புள்ள பணத்தை மீட்ட பறக்கும் படை அதிகாரிகள், அதை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அழிஞ்சிகுளம் மற்றும் பெத்தவேப்பம்பட்டு பகுதிகளில் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதிகளில் வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தவர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும் பணம் மற்றும் வாக்காளர் பட்டியல்களை தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து தூக்கி வீசப்பட்ட 2 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டு தேர்தல் பறக்கும் படையினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து அப்பணத்தை வாணியம்பாடி சார் நிலை கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அந்த மர்ம நபர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த வாரம் அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன.
இதனால் யாரும் எந்த வித ஆவணங்களும் இன்றி ரூ 50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்லக் கூடாது என்பது தேர்தல் நடத்தையில் ஒன்றாகும். இது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்ப்பதற்காக கொண்டு வந்த விதியாகும்.
ரூ 50 ஆயிரத்திற்குள் பணம் கொண்டு செல்லலாம். அதற்கு மேல் கொண்டு போய் ஆவணங்கள் இல்லாவிட்டால் அது தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும். ஒரு வேளை ரூ 10 லட்சத்திற்கு மேல் யாராவது பணம் கொண்டு சென்றால் அந்த வழக்கை வருமான வரித் துறை விசாரிக்கும்.
அந்த வகையில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் நாடு முழுவதும் அதிக அளவிலான பணம், தங்கம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. அதிக அளவில் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வகையில், முதல் இடத்தில் ராஜஸ்தான் (ரூ.778.52 கோடி), 2-ம் இடத்தில் குஜராத் (ரூ.605.33 கோடி) ஆகிய மாநிலங்களை தொடர்ந்து, தமிழகம் ரூ.460.84 கோடியுடன் 3-வது இடத்தில் உள்ளது.
சி-விஜில் செயலி மூலம், பணம், இலவச பொருள் விநியோகம் குறித்து 3,262 புகார்கள் பெறப்பட்டுள்ளன. தேர்தல் நேர்மையாக நடைபெற தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆயினும் இது போன்ற பணம் விநியோகம் நடத்தப்பட்டுத்தான் வருகிறது.












Click it and Unblock the Notifications