வருமான வரி சோதனைக்கு ஆளான மைக்கேல் அருள் சிக்கியது இதற்குதான்!
வருமான வரி சோதனையில் சிக்கியுள்ள மைக்கேல் அருளின் தந்தை சிறந்த போலீஸ் அதிகாரி என பெயரெடுத்த மாஜி ஐஜி அருள்.
சென்னை : ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் குருமூர்த்தியை தொடர்ந்து வருமான வரி சோதனைக்கு ஆளாகியுள்ள மைக்கேல் அருள் குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.
ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் குருமூர்த்தியின் வீடு, அலுவலகம், கான்டிராக்ட் தொழிலில் ஈடுபட்டுள்ள அவரது மனைவி மற்றும் மகனின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சென்னையில் சோதனை நடத்தினர். அப்போது 32 கிலோ தங்கம், ரூ.41 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக மைக்கேல் அருளின் சொத்தை தவறான தொகையை காட்டி குருமூர்த்தி பத்திரப்பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இன்று காலை முதல் சென்னை அடையாறு போட் கிளப்பில் அமைந்துள்ள மைக்கேல் அருள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள மைக்கேல் அருளுக்கு சொந்தமான வீட்டை குருமூர்த்தியின் குடும்பத்தார் வாங்கியுள்ளனர். சுமார் ரூ.26 கோடி மதிப்பிலான வீட்டை ரூ.10 கோடிக்கே பதிவு செய்துள்ளனர், இதற்கு மைக்கேல் அருளும் உடன்பட்டுள்ளார். மைக்கேல் அருள், தமிழக காவல்துறை வரலாற்றில் பிரபலமான ஐ.ஜி அருளின் மகன்.
எப்.வி அருள் என்று அனைவராலும் அறியப்படும் அவர், இன்டர்போல் என்ற சர்வதேச காவல்துறையில் பணியாற்றிய முதல் ஐபிஎஸ் அதிகாரி. இதே போன்று தமிழக காவல்துறை வரலாற்றில் மிக உயரிய பதவியான டிஜிபி பதவி உருவாவதற்கு முன்னர் ஐ.ஜி பதவியில் இருந்தவர்.
அவரது மகன் மைக்கேல் தாய் வழி வந்த சொத்தை மதிப்பை குறைத்து காட்டி குருமூர்த்திக்கு விற்றுள்ளார். மேலும் அந்த சொத்தை விற்கக்கூடாது என்று உயிலில் உள்ள நிலையில் அதை மீறி அவர் விற்றுள்ளதாக கூறப்படுகிறது.