முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் மருத்துவமனை வருகை.. கருணாநிதி உடல்நலம் கேட்டறிந்தார்
சல்மான் குர்ஷித் கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரத்த அழுத்தம் காரணமாக காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரபரப்பட்டு வந்தது.
இதனால், கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதாகவும் சிகிச்சை பிறகு அவரது உடல்நிலை சீராகி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து தொண்டர்கள் கலைந்து சென்றனர்.
எனினும், கருணாநிதி குணமடைய வேண்டும் என தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் தற்போதும் கூடி வருகின்றனர். கருணாநிதியின் உடல்நலம் பற்றி அறிய முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் கருணாநிதி இருப்பதால் சல்மான் குர்ஷித்தால் அவரை சந்திக்க முடியவில்லை.
என்றாலும் கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையிலிருந்து திரும்பி சென்றார். கருணாநிதியின் உடல்நலம் குறித்து அறிய பல்வேறு அரசியல் தலைவர்கள் இன்றும் மருத்துவமனைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.