பனிக்குடத்தில் வைத்து பத்திரப்படுத்திய தாயே... கருணாநிதிக்கு ராசா உருக்கமான கடிதம்!
திமுக தலைவர் கருணாநிதிக்கு தீர்ப்பை காணிக்கையாக்குவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்.
Recommended Video

சென்னை : அலைக்கற்றை அரசியலில் அரசு மற்றும் அரசமைப்பு நிறுவனங்கள, ஊடகங்கள், அரசியல் கட்சிகள் தொடுத்த தாக்குதல்களை எதிர்கொள்ள நான் கரைந்துவிடாமல் இருக்க என்னை பனிக்குடத்தில் வைத்து பத்திரப்படுத்திய தாயே, தீர்ப்பை உங்களுக்கு காணிக்கையாக்குகிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா திமுக தலைவர் கருணாநிதிக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
2ஜி தீர்ப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து திமுக தலைவர் கருணாநிதிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா திமுக தலைவர் கருணாநிதிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், அதில் : நித்திரை நிலைகொள்ளாத இந்த நடுநிசியில்தலைநகரரின் கடுங்குளிரில் உங்கள் வார்த்தைகளின் ஒலிப்பாப என் செவிகள் உண்ணா நோன்பிருக்கின்றன. 7 ஆண்டுகள் ஓடிவிட்டன. அலைவரிசைப் புயலின் கோரத்தாக்குதல் தனிமனிதர்களை மட்டுமல்ல, தத்துவார்த்தமுள்ள ஒரு இயக்கத்தையும் களங்கப்படுத்திய இந்த ஏழு ஆண்டுகளில் எத்தனை இழி சொற்கள், ஏளனங்கள்?
உங்களின் ஆளுமையின் விஸ்வரூபத்தை வமன வடிவத்திற்கு சுருக்கிவிட முடியாதா என்று ஏங்கியவர்களுக்கு இந்த அலைவரிசை அரசியல் எப்படியெல்லாம் கைகொடுத்தது? பொய்களோடு போராடுவதும் உண்மையை தேடுவதும் சில நேரங்களில் வெவ்வேறானவை. அலைவரிசை வணிகத்தில் சிலரின் மூலதன முதலீடுகள் முற்றிலுமாய் இன்ற நட்டத்தில் முடிந்து விட்டன.
இறுக்கத்தில் இருந்து மீட்டது
சிறையில் இருந்த போது நீங்களும், ஸ்டாலினும் தலைநகருக்கே வந்து ஊட்டிய நெஞ்சுரம் என்னை இறுக்கத்தில் இருந்து மன அழுத்தத்தில் இருந்தும் மீட்டன. பிணையில் சென்னை வந்த போது நீங்களும், பேராசிரியர் அன்பழகனும் சூட்டி மகிழ்ந்த மலர்மாலைகள் என்னை மகிழச் செய்தன. உலக வரலாற்றில் தனிமனித தாக்குதல் மிகச் சாதாரணமானவை மட்டுமல்ல அன்றாட நிகழ்வகள். ஆனால் அலைக்கற்றை தாக்குதல் தனி மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு நிறுவனங்களால் நிகழ்த்தப்பட்டவை.

உலக வரலாற்றில் புதியது
சிவிவி, சிபிஐ, நாடாளுமன்ற கூட்டுக்குழு மற்றும் உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடுத்த தாக்குதல்கள் நிர்வாக அமைப்பு முறையில் இந்திய வரலாற்றிற்கு மட்டுமல்ல உலக வரலாற்றுக்கு கூட புதியது தான். ஐமுகூ அரசை வீழ்த்திட நடத்தப்பட்ட சதியில் அலைவரிசை அகப்பட்டுக் கொண்டதை அரசே உணர முடியாமல் போனது தான் அந்த ஆட்சியின் அவலம்.

ஆதிக்க சக்திகள்
உளவுத்துறை தன் கையில் இருந்து இதை உணரமுடியாத ஓர் அரசின் நிலைதடுமாற்றம். இதனால் தறிகெட்டு ஓடிய சில நிறுவனங்கள் பின்னணியில் ஒரு மாநிலக் கட்சியான திமுகவின் இந்திய அரசியல் ஆளுமையை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று முடிவெடுத்த சில ஆதிக்க சக்திகளும் இருந்திருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள அசாத்திய அறிவு வேண்டியதில்லை.

2009ல் சாதனை
22.2.2010ல் நாடாளுமன்ற இரு அவைகளின் உரையாற்றிய குடியசுத் தலைவர் 2012ம் ஆண்டில் 60 கோடி தொலைபேசி இணைப்புகள் என்ற இலக்கைத் தாண்டி 2009ம் ஆண்டே 57 கோடி இணைப்புகளை தொலைதொடர்புத் துறை சாதனை புரிந்துள்ளது குறிப்பிடப்பட்டது. அலைவரியை இருப்பையே மறைத்து வைத்து சில நிறுவனங்கள் மட்டுமே அதனை ஏகபோகமாக அனுபவித்துக் கொண்டிருந்தது தகர்க்கப்பட்டது.

குற்றம் என சிறைக்கு அனுப்பினார்கள்
இன்று எல்லோர் கையிலும் எளிதாக புழக்கத்தில் விடப்பட்டுள்ள வாட்ஸ் அப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தினேன். இதனைக் கொண்டு வந்ததற்காக குற்றம் என பெயர் சூட்டி சிறைக்கு அனுப்பிய விசித்திரம் இந்த தேசத்தில் மட்டும் தான் சாத்தியம்.
ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி நட்டம் என்று கணக்கு சொன்னவர்களின் வஞ்சகத்தால் உங்களின் 80 ஆண்டுகலா பொதுவாழ்வையும் கொச்சைப்படுத்த எத்தனித்த எச்சில் சிந்தனையாளர்களுக்கு எவர் தண்டனை தருவது. அலைவரிசை பிரச்னையின் மீது புலனாய்வும் நிர்வாக விசாரணையும் நடத்திய நிறுவனங்களில் சிலவற்றின் அறியாமை புரியாமை தெளியாமை.

அலைவரிசையை அடக்க முயற்சி
சிலவற்றின் சூழ்ச்சி, வஞ்சகம் இவையனைத்தும் இந்திய நிர்வாக அமைப்பின் மீதும் நீதி பரிபாலனத்தின் மீதும் படிந்து போன கறைகள். பேசத் தெரிவது ஒன்றே தனித்தகுதியாக கொண்ட சிலர் தங்களின் சொல்லாடலுக்குள் அலைவரிசையை அடக்க முயற்சித்து முடிந்த அளவிற்கு வெற்றி பெற்றது விவாரிக்க முடியாத விசித்திரம்.

நீதி கிடைக்க வேண்டாமா?
அறியாமைக்குக்கூட சில நேரங்களில் சிம்மாசனம் கிடைத்து விடுவது நீங்கள் அறியாததல்ல. ஒருவனை குறை கூறிவிடுவது எளிது. அந்த நாக்கிற்கு இரண்டு கைதட்டல் கிடைக்கும். ஆனால் குறை கூறியவனின் நெஞ்சுக்கு நீதி கிடைக்க வேண்டாமா? இகே குறை கூறிய எவருக்கும் நெஞ்சம் என்ற ஒன்றே இல்லை. என்றாலும் நமக்கு நீதி கிடைத்திருக்கிறது.

வணங்கிச் சென்றேன்
தீர்ப்புக்காக டெல்லி செல்லும் முன்னர் 16.12.2017ம் அன்று இரவு உங்களை சந்தித்து வெற்றி பெறவாழ்த்துமாறு கேட்டுக் கொண்டேன். உங்கள் காதருகே சொல்லி வணங்கிய போது உங்கள் உதடுகள் சரி என்று உச்சரித்த போது சப்தம் வரவில்லை.

கரைந்துவிடாமல் பாதுகாத்தவரே
என்றாலும் உங்கள் வலதுகரம் உயர்த்தி புன்னகையோடு வாழ்த்தினீர்கள். கொட்டுகின்ற மழையில் வீசுகின்ற புயலில் சரளைக் கற்கள் நிறைந்த மலை உச்சியை நோக்கி நடப்பதைப் போல அரசு மற்றும் அரசமைப்பு நிறுவனங்கள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள் தொடுத்த தாக்குதல்களை எதிர்கொண்டு நடத்திய இந்த அலைவரிசை பயணத்தில் நான் கரைந்துவிடாமலிருக்க என்னை பனிக்குடத்தில் வைத்து பத்திரப்படுத்திய தாய் நீங்கள்.

உண்மையை மறைக்க முடியாது
அந்த நன்றியுணர்ச்சியோடு உங்கள் காலடியில் இந்த தீர்ப்பினை வைத்து வணங்குகிறேன். மீண்டும் உங்கள் வாசகங்கள் என்னை வருடுகின்றன, உண்மையை மறைப்பது விதையை மண்ணுக்குள் புதைப்பதைப் போன்றது என்றும் ராசா தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications