சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் விடுதலை
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்ட 19 பேரை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜ கண்ணப்பன் 1991 முதல் 96 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.11 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 252 மதிப்புள்ள கட்டிடங்கள், நிலங்கள், வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான சொத்துக்களை தன் பெயரிலும் தன் மனைவி, தாயார் மற்றும் உறவினர் பெயரிலும் வாங்கியதாக 1996ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
20 பேர் மீது வழக்குப் பதிவு
இந்த வழக்கில் கண்ணப்பனின் மனைவி நளாயினி, தாயார் ராஜலட்சுமி, தம்பி செந்தாமரை, மற்றொரு தம்பி திருவழகு, உறவினர்கள் செல்லம்மாள், கண்ணகி, கலைராஜன், கண்ணாத்தாள், தவமணி, ஜெயபாரதி, தேவகியம்மாள், பாலசுப்பிரமணியன், கணபதி, சுலோச்சனா, கலைமதி, லட்சுமணன், மாணிக்கம், பெருமாள், சரஸ்வதி ஆகிய 20 பேர் சேர்க்கப்பட்டனர்.
சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை
சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இது நீண்ட காலமாக விசாரணையில் இருந்து வருகிறது. குற்றப்பத்திரிக்கை 2005-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டது. 20 பேருக்கும் 2007ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
18 பேர் மீது விசாரணை
விசாரணைக் காலத்திலேயே கண்ணப்பனின் மனைவி நளாயினி, தாயார் ராஜலட்சுமி ஆகியோர் இறந்து போய் விட்டனர். இதனால் இவர்களது பெயர்கள் குற்றப்பத்திரிக்கையிலிருந்து நீக்கப்பட்டது.
19 ஆண்டுகால வழக்கு
கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி ராஜகண்ணப்பன் உள்ளிட்ட 18 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் போலீசார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. எனவே, கண்ணப்பன் உட்பட அனைவரையும் விடுதலை செய்வதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவு பிறப்பித்தார்.
நிம்மதி பெருமூச்சு
1996ம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பின் குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, ராஜகண்ணப்பனும் அவரது உறவினர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.