கோவை குட்கா ஆலை விவகாரத்தில் 4 பேர் கைது: உரிமையாளர் கைதாகிறார்.. டெல்லி விரைகிறது போலீஸ்
கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலை விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ஆலை உரிமையாளரை கைது செய்ய தமிழக போலீசார் டில்லி விரைகின்றனர்.
நேற்றுமுன்தினம் கோவை கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த குட்கா தொழிற்சாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியை சேர்ந்த அமித் ஜெயின் என்பவருக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில், போதைபொருட்கள் தயார் செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, போலீசார் அங்கு அதிரடியாக சென்று விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, போதை பாக்குகள் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 20 டன் மூலப்பொருட்கள் மற்றும் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 79 மூட்டைகள் குட்காவை பறிமுதல் செய்து சீல் வைத்தனர்.
இந்நிலையில், குட்காஆலை விவகாரம் தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வட மாநிலத்தை சேர்ந்த அஜய், சோஜிராம், ராம்தேவ் மற்றும் மேலாளர் ரகுராம் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, குட்கா தொழிற்சாலை உரிமையாளர் 37 வயதுடைய அமித்ஜெயினை கைது செய்ய தமிழக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறைதான் ஜெயின் தமிழகம் வருவாராம். எனவே அவரை கைது செய்ய தமிழக போலீசார் டில்லி விரைகின்றனர்.