தமிழகத்திற்கு புதிதாக வருகிறது 4 சாலை திட்டங்கள்.. தென் மாவட்டங்களுக்கு அதிக பயன்
தமிழகத்திற்கு வருகிறது முக்கிய 4 சாலை திட்டங்கள்.. தென் மாவட்டங்களுக்கு அதிக பயன்
Recommended Video
தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களுக்கு இடையே சரக்குகளை எடுத்துச்செல்லும் வாகனங்களின் பயணதூரத்தை குறைக்கும் நோக்கத்தில், மத்திய அரசு டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் நான்கு பெரிய புதிய சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் பாரத மாலா பரியோஜனா திட்டம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாநிலங்களில் நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்யும் திட்டங்களில் இதுவும் ஒன்று. அவற்றை அடுத்த சில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, பிள்ளையார்பட்டி வழியாக மேலூர், காரைக்குடி இடையிலான சாலையையும், திருமங்கலம் - செங்கோட்டை இடையே 151 கி.மீ. நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக ராஜபாளையத்திலிருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் வரையில் ஒரு பொருளாதார சாலையும் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இதே போல, மதுரை முதல் போடி வரையிலான 44 கி.மீ. சாலையும் தஞ்சாவூருடன் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை இணைக்கும் 85 கி.மீ. தூரம் மற்றொரு சாலையும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய சாலை அமைக்கும் திட்டங்கள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த நான்கு புதிய சாலை அமைக்கும் திட்டங்களால் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், "நாங்கள் ஏற்கெனவே மேலூர், பிள்ளையார்பட்டி, காரைக்குடியை இணைக்கும் 45.85 கி.மீ. சாலை அமைப்பதற்கு ரூ.756 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு ஒப்பந்தம் கோரியுள்ளோம்." என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், அதிகாரிகள் கூறுகையில், "மேலூர், காரைக்குடி சாலை அமைப்பதற்கு தேவையான நிலங்களை அளந்து முடித்து நிலங்களை கையகப்படுத்துவதற்கு உரிய நில உரிமையாளர்கள் அடையாளம் காண்பதற்கு 3 பி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது" என்று கூறினர்.
அதோடு, செங்கோட்டை - திருமங்கலம் சாலை திட்டம், முதலில் திருமங்கலம் - ராஜபாளையம் வரை 71 கி.மீ தூரமும், இரண்டாவது ராஜபாளையம் - செங்கோட்டை வரை 80 கி.மீ. தூரமும் என இரண்டு கட்டங்களாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் கட்ட சாலை அமைக்கும் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மதுரை - போடி, திருப்பத்தூர் - தஞ்சாவூர் சாலை அமைக்கும் திட்டத்துக்கு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழ்நாட்டில் பல புதிய சாலை அமைக்கும் திட்டங்களை அறிவித்துவருகிறது.
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பல்வேறு சாலை திட்டங்களுக்காக ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே மாநில அரசு நிலங்களை கையகப்படுத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.