ஏழே 7 தியாகிகள்.. ஆளுக்கு நாலு இட்லி, ஒரு வாட்டர் பாக்கெட்.. இது அரசின் "சிறப்புக் கவனிப்பு"!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவின்போது 7 தியாகிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஆளுக்கு ஒரு வாட்டர் பாக்கெட்டும், இட்லி பாக்கெட்டும் கொடுத்து மாவட்ட நிர்வாகம் கவனித்த விதம் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது.
நாமெல்லாம் இன்று சம்மணக்கால் போட்டு உட்கார்ந்து நிறுத்தி நிதானமாக சாப்பிடும் அளவுக்கு சுதந்திரமாக இருக்க இதுபோன்ற லட்சக்கணக்கான பெரியோர்கள் செய்த தியாகம்தான் காரணம்.. உண்மையில் அவர்கள் போட்ட பிச்சை நாம் இன்று வாழும் வாழ்க்கை. ஆனால் அவர்களுக்கே பிச்சை போடுவது போல மாவட்ட நிர்வாகம் நடந்து கொண்ட செயல்தான் மிகவும் உறுத்தலாக உள்ளது.
இந்த தியாகப் பெருமக்களுக்கு இப்படித்தான் உபசாரம் செய்வதா.. இதுதான் கெளரவமா.. இதுதான் அரசு தரும் மரியாதையா...

கலெக்டர் அலுவலகங்களில் கொடியேற்றம்
குடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் வழக்கம் போல கோலாகலமாக நடந்தேறின. சென்னையில் ஆளுநர் ரோசய்யா கொடியேற்றினார்.

தியாகிகளுக்குக் கெளரவம்
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் நடந்த கொடியேற்றும் நிகழ்ச்சியின்போது தியாகிகளுக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தது அரசுத் தரப்பு.

சடங்குக்காக
இது வருடா வருடம் நடைபெறும் சடங்கு போல மாறி விட்டது. அதாவது தியாகிகள் சிலரைக் கூப்பிட்டு பொன்னாடை போர்த்தி சாப்பாடு போட்டு அனுப்பி வைத்து வருகிறார்கள் - கடமை போல.

ராமநாதபுரத்தில் நடந்த கூத்து
இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து வீரத்துடன் போரிட்டவர்கள் பெரும்பாலும் தமிழர்களே. அவர்களும் ராமநாதபுரம் மாவட்டத்தினர்தான் அதிகம். நேதாஜி கூப்பிட்டதும் கிளம்பிப் போனவர்கள் அந்த வீர மறவர்கள்.

வெறுத்துப் போச்சு
இவர்களில் பலரும் மாவட்டத் தலைநகரில் நடைபெறும் கெளரவ நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. காரணம்,அரசு தரும் மரியாதை அப்படி. இந்த ஆண்டு வெறும் 7 பேர் வந்திருந்தனர்.

நாலு இட்லியும், வாட்டர் பாக்கெட்டும்
இவர்களுக்கு நிகழ்ச்சி முடிந்ததும் ஆளுக்கு நாலு இட்லியும், ஒரு தண்ணீர்ப் பாக்கெட்டையும் மட்டும் கொடுத்து உபசரித்தது மாவட்ட நிர்வாகம். இது தியாகிகளுக்கு மட்டும்தானாம். அவர்களுக்குத் துணையாக வந்தவர்களுக்கு இதுவும் கிடையாதாம்.

அவ்வளவு மக்கு பிளாஸ்திரிகளா?
அத்தனை தியாகிகளையும் மாவட்ட நிர்வாகமே வாகனம் வைத்து அழைத்து வந்து, அருமையான விருந்து கொடுத்து கூடவே கலெக்டரும், இந்த எம்.எல்.ஏ, எம்.பிக்கள் எனப்படும் "மக்கள்" பிரதிநிதிகளும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டு பின்னர் தியாகிகளை நல்ல முறையில் வீடுகளுக்கு அனுப்பி வைப்பதுதானே சரியான விருந்தோம்பலாக இருக்க முடியும்.. இது கூடவா மாவட்ட நிர்வாகத்திற்குத் தெரியாது.. அவ்வளவு மக்கு பிளாஸ்திரியாகவா இருக்கிறார்கள் மாவட்ட நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications