தமிழகமே வீதியில் இறங்கியது! அலங்காநல்லூர் அறவழிப்போர் மாணவர்கள் 240 பேரை விடுதலை செய்திடுக!!
அலங்காநல்லூர் அறவழிப் போர் மாணவரக்ள் 240 பேரை விடுதலை செய்யும் கோரிக்கை வலுத்து வருகிறது. 240 பேர் விடுதலைக்காக தமிழக நகரங்கள் போர்க்கோலம் பூண்டுள்ளன.
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பாக 21 மணிநேரம் அறவழிப் போராட்டம் நடத்திய 240 மாணவர்கள் கைதைக் கண்டித்து ஒட்டுமொத்த தமிழகமே வீதியில் களமிறங்கியது. 'மாணவர்களை விடுதலை செய் அல்லது எங்களையும் கைது செய்' என்ற தன்னெழுச்சி முழக்கம் தமிழகத்து நகரங்களை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தவர்கள் இப்படி ஒரு வரலாறு காணாத எழுச்சி தமிழகத்தில் ஏற்படும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்... ஒருநாள் அல்லது 2 நாள் போராடுவார்கள் என்றுதான் நினைப்பார்கள்.
இப்படி மனப்பால் குடித்தவர்களுக்கு சம்மட்டி அடி கொடுத்தது அலங்காநல்லூர் மண்... 21 மணிநேரம் கொட்டும் பனியில் வெட்ட வெளியில் விடிய விடிய அறவழி அமைதிப் போராட்டத்தை நூற்றுக்கணக்கான மாணவர்கள் முன்னெடுத்தனர்.

குண்டுகட்டாக கைது
இப்போராட்டத்துக்கு மதிப்பு தராத தமிழக அரசின் காவல்துறை இன்று காலை அந்த அறவழி தியாகச் செம்மல்களை குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு போய் மண்டபங்களில் அடைத்தது. அத்துடன் ஓய்ந்துவிடும் போராட்டம் என நினைத்தவர்கள் விக்கித்துப் போயுள்ளனர்.

மீண்டும் போர்க்கோலம்
அலங்கநால்லூர் மக்கள் கிளர்ந்தெழுந்து வீதிக்கு வந்தனர்... தூக்கிக் கொண்டு போன மாணவர்களை திரும்பி கொண்டு வந்துவிடும் வரை நகரமாட்டோம் என வீதி மறியலில் இறங்கினர்.. 500க்கும் மேற்பட்ட பெண்கள் களத்துக்கு வர திகைத்துப் போனது போலீஸ்.

தன்னெழுச்சி போராட்டங்கள்
அலங்காநல்லூர் மண்ணில் இருந்து தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்கள் இளைஞர்கள் என்ற செய்தி சட்டென காட்டுத் தீயாக பரவியது.. தமிழகத்தின் தலைநகர் சென்னை தொடங்கி தமிழகம் முழுவதும் பெரும் தன்னெழுச்சி போராட்டங்கள் வெடித்து கிளம்பியுள்ளன.

அதிர்ந்து போன அரசுகள்
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட 240 மாணவர்களையும் விடுதலை செய்; அல்லது எங்களையும் கைது செய் என்ற முழக்கத்துடன் வீதிகளில் இறங்கிவிட்டனர் இளைஞர்கள், மாணவர்கள். அரசியல் கட்சிகளின் தூண்டுதல் இல்லாமல் தாங்களே வீதிக்கு வந்த இந்த அறவழிப் போராட்டம் அரசாங்கங்களை அதிரவைத்திருக்கிறது.

விடுதலை செய்திடுக!
இளைஞர்களும் மாணவர்களும் பெண்களும் தமிழகத்தின் பண்பாட்டு அடையாள மீட்புக்கான களத்தில் முன்னணி தளபதிகளாக நிற்க அரசியல் கட்சிகளோ கையை பிசைந்து கொண்டு ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிற வரலாற்று சித்திரத்தை தமிழ் மண் இப்போது பார்த்து கொண்டிருக்கிறது. அலங்காநல்லூரில் அறவழியில் அமைதியாகப் போராடிய இளங்காளைகளை தமிழக அரசு விடுதலை செய்வதைத் தவிர வேறுவழியே இல்லை என்பதை பெருவெடிப்பாய் கிளம்பியுள்ள இப்போராட்டங்கள் வலியுறுத்துகின்றன.












Click it and Unblock the Notifications