”குழந்தைகளுக்கு முழுக்கை சட்டை அணிவித்தால் டெங்குவிலிருந்து தப்பிக்கலாம்” - மருத்துவர் விளக்கம்
சேலம்: சேலத்தில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அரசு மருத்துவர் முழுக்கை சட்டை அணிந்தால் டெங்கு காய்ச்சல் வராது என்று விளக்கமளித்தார்.
சேலம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், நர்சிங் மற்றும் மருத்துவம் பயிலும் மாணவியர் 500 பேர் டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தியபடி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு பேரணியாக வந்தனர்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை உதவி கண்காணிப்பாளர் டாக்டர் தனபால், சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ஜெகதீஸ், குடும்பலநலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் விஜயலட்சுமி உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அரசு மருத்துவர் ரவிக்குமார், "டெங்கு காய்ச்சலில் நான்கு வகை உள்ளது. புதிதாக ஐந்தாவது வகை மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலில் "பி" மற்றும் "சி" ஆகிய இரண்டு வகையும் மிகவும் ஆபத்தானவை. காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.
டெங்கு காய்ச்சலால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் அவர்கள் அரைக்கை சட்டை அணிவது தான். இதனால், கொசு எளிதாக குழந்தைகளின் கைகளை தாக்குகிறது.
முழுக்கை சட்டை அணிந்தால் கொசு கடிக்காது. தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு, மழைக் காலம் முடியும் வரை முழுக்கட்டை சட்டை அணிவித்து வெளியில் அனுப்ப வேண்டும். இதன் மூலம், டெங்கு காய்ச்சல் வருவதை முற்றிலும் குறைக்கலாம்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications