நொறுங்கிய நாற்காலிகள், தடுப்புகள்! விஜய்யின் தவெக மாநாட்டு திடல் இப்போ எப்படி இருக்கு பாருங்க
விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டகர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாடு முடிந்த நிலையில், தற்போது மாநாட்டு திடலில் பல இடங்களில் நொறுங்கிய நிலையில் சேர்களும், பிளாஸ்டிக் பாட்டில்களும் மலை போல குப்பைகளாக தேங்கி கிடக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து அவரது கட்சி தொண்டர்கள் பல ஆயிரக்கணக்கில் திரண்டனர். விக்கிரவாண்டியே ஸ்தம்பிக்கும் அளவுக்கு நேற்று எங்கு பார்த்தாலும் தவெக தொண்டர்கள் கூட்டமாகத்தான் இருந்தது.

85 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டு சுமார் 75 ஆயிரம் நாற்காலிகளுடன் பிரம்மாண்ட ஏற்பாடுகளை தவெக கட்சி நிர்வாகிகள் செய்து இருந்தனர். மாநாட்டிற்கு சரியாக 4 மணிக்கு விஜய் வந்தார். கட்சியின் கொள்கைகள் வெளியிட்ட பிறகு விஜய் பேச தொடங்கினார். 45 நிமிடங்கள் விஜய் தனது உரையை நிகழ்த்தினார்.
மாநாடு 7 மணியளில் முடிந்த பிறகு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த தவெக கட்சியினர் தங்கள் வாகனங்களில் சொந்த ஊர் சென்றனர். இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் இன்ச் இன்ச் ஆக நகர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளகினர். பல மணி நேரத்திற்கு பிறகே இந்த வாகன நெரிசல் சரியானது.
மாநாட்டு திடலில் நாற்காலிகள் பலவும் சேதம் அடைந்து நொறுங்கி கிடந்தன. பல்வேறு தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த தடுப்புகள் கூட இருந்த இடமே தெரியாத அளவுக்கு அடையாளம் தெரியாத மாறி கிடக்கின்றன. நாற்காலிகள் உடைந்து நொறுங்கியும், சில தடுப்புகள் உடைந்தும் அந்த இடமே சின்னாபின்னாமாகி கிடக்கிறது. தற்போது மநாட்டு திடலில் பல இடங்களில் நொறுங்கிய நிலையில் சேர்களும், பிளாஸ்டிக் பாட்டில்கள் மலை போல குப்பைகளாக தேங்கி கிடக்கின்றன.
முன்னதாக மாநாட்டில் பேசிய விஜய், திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். விஜய் கூறியதவாது: - இங்கே ஒரு கூட்டம் கொஞ்சம் காலமாக யார் அரசியலுக்கு வந்தாலும், ஒரு குறிப்பிட்ட கலரை அவர்கள் மீது பூசி, பூச்சாண்டி காட்டி, மக்களை ஏமாற்றி, இவர்கள் மட்டும் மறைமுகமாக டீலிங் வைத்துக்கொண்டு, தேர்தல் நேரத்தில் அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். எப்போது பார்த்தாலும் பாசிசம் என்று சொல்லிக்கொண்டு போகிறார்கள்.

ஒற்றுமையாக இருக்கும் மக்கள் மத்தியில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பிரிவினை பயத்தை காட்டி ஒரு சீன் போடுவதே வேலையாக போய்விட்டது. நான் தெரியாமல் தான் கேட்கிறேன், அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?. நீங்களும், அவர்களுக்கு சரிசமம் தான். மக்கள் விரோத ஆட்சியை, திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள்.
எனவே இனியும் அந்த கலரை, இந்த கலரை பூசி, என்னதான் மோடி மஸ்தான் வேலையை செய்தாலும் ஒன்றும் நடக்காது, தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள கலரை தாண்டி, யாரும் எந்த கலரையும் அடிக்கவே முடியாது. எங்கள் கோட்பாடே பிறப்பால் அனைவரும் சமம் என்பது தான். இது யாருக்கு நேர் எதிரான கோட்பாடு என்பதை நான் சொல்லியா தெரிய வேண்டும்?,
இந்த நாட்டை பாழ்படுத்தும் பிளவுவாத அரசியல் செய்வோர்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை ரீதியான முதல் எதிரி. திராவிட மாடல் ஆட்சி என்று பெரியார், அண்ணா பெயரை வைத்து தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப சுயநலக்கூட்டம் தான் அடுத்த எதிரி, அரசியல் எதிரி.

கொள்கை, கோட்பாடு அளவில் தேசியத்தையும், திராவிடத்தையும் பிரித்து பார்க்க போவதில்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள். நாம் எந்த குறிப்பிட்ட அடையாளத்தின் கீழும் நம்மை சுருக்கி கொள்ளாமல், மதச்சார்பற்ற சமூக நீதிகொள்கைகளை, நமது கொள்கை அடையாளமாக முன்னிறுத்தி செயல்பட போகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications