அரசு மருத்துவமனை ஆபரேசன் தியேட்டர்களை மேம்படுத்த ரூ.20 கோடி: ஜெ. உத்தரவு
சென்னை: அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:
"பல்வேறு நோய் சிகிச்சைகளுக்காக, அரசு மருத்துவமனைகளை நாடி வரும் பொதுமக்களுக்கு உயர்தர நவீன சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சென்னை அரசு பொது மருத்துவமனையில் உள்ள 4 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 3 கோடி ரூபாய், ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள 10 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 3 கோடி ரூபாய், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலுள்ள 8 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 2 கோடியே 50 லட்சம் ரூபாய், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள 2 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 1 கோடியே 25 லட்சம் ரூபாய்,
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள 3 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 1 கோடி ரூபாய், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள 2 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 1 கோடியே 25 லட்சம் ரூபாய் என 12 கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளார்.
மேலும் பரமக்குடி, திருமங்கலம், சங்கரன்கோவில், அறந்தாங்கி, திருமயம், திருச்செந்தூர், பொள்ளாச்சி, அரக்கோணம், கள்ளக்குறிச்சி, குன்னூர், மன்னார்குடி, திருச்சி, திருச்செங்கோடு, பேரணாம்பட்டு, செய்யார், பென்னாகரம் ஆகிய 16 இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த ஒவ்வொரு மருத்துவமனைக்கும் 50 லட்சம் ரூபாய் என 8 கோடி ரூபாயும் என மொத்தம் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கை மூலம் பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைக்க வழிவகை ஏற்படும்" என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications