மீண்டும் காங்கிரசில் சேருவதைத் தவிர வாசனுக்கு வேறு வழியில்லை: திருநாவுக்கரசர்
ராமநாதபுரம்: ஜி.கே.வாசன் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வருவார் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திருநாவுக்கரசர், மாவட்ட துணை தலைவர் செல்லத்துரை அப்துல்லா இல்ல வளாகத்தில் தொடங்கி வைத்து விண்ணப்பங்களை கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய திருநாவுக்கரசர் கூறியதாவது:-
''பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா போன்றோர் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தேர்தலில் அறிவித்து ஆட்சிக்கு வந்தனர்.
தற்போது, இந்த ஆட்சியின் மோசமான செயல்பாடுகளால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதன் காரணமாக டெல்லியில் நடந்த தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
ஜி.கே.வாசன் கட்சியை விட்டு வெளியேறியதால் காங்கிரசுக்கு எந்தவித பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், வாசன் காங்கிரசிலிருந்து விலகிச் சென்றுள்ளது தற்காலிகமானது தான். அவர், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பி வருவார். காங்கிரஸ் கட்சியில் சேருவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை.
தேர்தல் அறிவிப்புக்கு பின் கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும். இலங்கை செல்லும் பிரதமர் மோடி மீனவர்கள் பிரச்சனையில் பேச்சுவார்த்தை மூலம் சரியான முடிவு எடுக்க வேண்டும். மீனவர்களை சுடுவதாக கூறிய இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம்." என்றார்.












Click it and Unblock the Notifications