சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் விரும்பும் கட்சியுடன் தமாகா கூட்டணி அமைக்கும்: வாசன் பேச்சு
குற்றாலம்: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி அமைத்து, வெற்றிக் கூட்டணிக்கு அடிப்படையாக இருப்போம் என்று தமாகா மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
குற்றாலத்தில் நேற்று நடைபெற்ற தமாகா மாநிலச் செயலர் என்.டி.எஸ்.சார்லஸ் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட வாசன் பேசுகையில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்து வருகிறேன். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தமாகாவுக்கு வலுசேர்க்கும் வகையில் இளைஞர்கள், நடுநிலையாளர்கள், பொதுமக்கள் அதிகளவில் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் பணி, இயக்கப் பணி என இருந்தாலும்,மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனநிலை,தொண்டர்களின் உணர்வுகளைத் தெரிந்து கொண்டு வருகிறேன்.
இறுதியில் என் முடிவை அறிவிப்பேன். தற்போதைய சூழ்நிலையில் எந்த இயக்கமும், கூட்டணி முடிவு குறித்து எந்தவிதமான முடிவுகளையும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை.
மாநிலம் முழுவதும் தமாகாவுக்கு செல்வாக்கும், பலமும் உள்ளது. எனவே, மக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியை அமைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவோம். மிகப் பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரையிலும் எந்தக் கட்சியும் தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை செய்யவில்லை என்றார் அவர்.
விழாவில்,கட்சியின் மூத்த துணைத் தலைவர் சா.பீட்டர்அல்போன்ஸ், செயற்குழு உறுப்பினர் தியாகி லட்சுமிகாந்தன் பாரதி, துணைத் தலைவர் ராமசுப்பு, மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.அய்யாத்துரை, சிறுபான்மை அணி மாநிலத் தலைவர் அ.அமீர்கான், சீவநல்லூர் ஊராட்சித் தலைவர் ப.சட்டநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications