சென்னையில் ஆசிரியரை பள்ளிக்குள் புகுந்து தாக்கிய கும்பல்! போராட்டத்தில் குதித்த பெற்றோர்!
சென்னை: சென்னையில் ஒழுங்கீனமாக நடந்த மாணவனை கண்டித்த உடற் கல்வி ஆசிரியர் கொடூரமாக தாக்கப்பட்டதைக் கண்டித்து நூற்றுக்கணக்கான பெற்றோர் போராட்டத்தில் குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கும் ராகவேந்திரா திருமண மண்டபம் அருகே லயோலா மெட்ரிகுலேஷன் என்னும் தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் உடல் கல்வி ஆசிரியராக இருப்பவர் பாஸ்கரன்(40). அவர் நேற்று 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கையில் அர்னால்ட் என்ற மாணவர் சக மாணவர்களுடன் பேசிக் கொண்டும் விசில் அடித்துக் கொண்டும் இருந்துள்ளார்.

இதை பார்த்த பாஸ்கர் அர்னால்டை கண்டித்துள்ளார். அதன் பிறகு மாணவர் தனக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று மதியம் 3 பேர் தங்களை வழக்கறிஞர்கள் என்று கூறிக் கொண்டு பள்ளிக்கு வந்து பாஸ்கரனை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அவர்கள் பாஸ்கரனை சந்தித்து அவருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது திடீர் என்று 10 பேர் பள்ளிக்குள் புகுந்து பாஸ்கரனை தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்த பாஸ்கரன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மருத்துவமனையில் இருக்கும் பாஸ்கரன் இன்று காலை சுயநினைவை இழந்தார். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பாஸ்கரனை கண்மூடித்தனமாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோடம்பாக்கம் பாலத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாஸ்கரனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் வாக்குறுதி அளித்த பிறகே அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.
பின்னர் போலீசார் அர்னால்ட் உள்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications