'பிரபல ரவுடி' வெள்ளை ரவியின் கூட்டாளி தென்னரசு 'சினிமா பாணியில்' பட்டப் பகலில் வெட்டிப் படுகொலை!
திருவள்ளூர்: பிரபல ரவுடி வெள்ளை ரவியின் கூட்டாளி திருவள்ளூர் பகுதியில் உள்ள திருமண மண்டப வாசலில் வெட்டிப் படுகொலை செய்யப் பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தென்னரசு. பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் மீது பல்வேறு கிரிமினல் குற்றங்கள் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. பிரபல ரவுடி வெள்ளை ரவியின் கூட்டாளி.
தென்னரசுவின் நண்பர் திருமணம் இன்று காலை வெங்கல் தாமரைப் பாக்கம் கூட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக தென்னரசு இன்று(வியாழக் கிழமை) காலையில் காரில் திருமண மண்டபத்திற்குச் சென்றார்.
திருமண நிகழ்ச்சியில் கலந்து விட்டு வீடு திரும்ப காரில் ஏற வாசலுக்கு வந்தார். அப்போது அங்கு திடீரென 2 மோட்டார் சைக்கிளில் 4 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திருமண மண்டபத்தின் வாசலில் தென்னரசுவை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
திருமண மண்டபத்தின் வாசலிலேயே ரவுடி தென்னரசு வெட்டி கொலை செய்யப்பட்டதால் திருமணத்திற்கு வந்தவர்கள் அச்சத்தில் அலறியபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் திருமண மண்டபமே வெறிச்சோடி காணப்பட்டது.
திருமண மண்டபத்தின் அருகே பேருந்து நிலையம் உள்ளது. இந்த சம்பவத்தால் பேருந்துக்காக நின்ற பொதுமக்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இந்த படுகொலை சம்பவத்தால் வெங்கல் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.